Sterlite Issue: ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதா? மதுரை ஹைகோர்ட் சரமாரி கேள்வி!
ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதா என்று மதுரை ஹைகோர்ட் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதா என்று மதுரை ஹைகோர்ட் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் உட்பட சிலர் மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்து இருந்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பேசினால் நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பேசிய மைக்கேல் ஜீனியஸ், சந்தோஸ் ராஜா ஆகியோர் தாக்கப்பட்டது குறித்தும் இதில் கூறப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மதுரை ஹைகோர்ட் சென்ற வாரம் கூறி இருந்தது.
இதையடுத்து தூத்துக்குடி எஸ்.பி இதில் ஆஜராகி போலீசால் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்தார். காவல்துறை இதில் எடுக்க நடவடிக்கையை அவர் அறிக்கையாக தாக்கல் செய்து இருந்தார். தமிழக அரசு இதில் நடுநிலையாக உள்ளது என்று அவர் அதில் கூறி இருந்தார்.
ஏன் திறக்கக்கூடாது
இதையடுத்து தமிழக அரசுக்கு மதுரை ஹைகோர்ட் கிளை சரமாரி கேள்விகளை எழுப்பியது. அதில், ஸ்டெர்லைட்டை திறக்கக்கூடாது என்று கூறினால் குற்றமா?.ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பேசினாலே நடவடிக்கையா எடுப்பது ஏன். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கருத்து கூறுவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பது ஏன்.
ஸ்டெர்லைட்டிற்கு எதிர்
ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக பேசுவோர் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்து இருக்கிறதா. ஸ்டெர்லைட் ஆலையை திறக்கவே மாட்டோம் என்று ஆட்சியர் கூறுகிறார். அப்படி கூறும் ஆட்சியர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்குமா. மக்களை தூத்துக்குடி போலீஸ் கைது செய்வது ஏன்.
சிபிஐ
ஸ்டெர்லைட்டிற்கு ஆதரவாக அரசு செயல்படுகிறதா. துப்பாக்கி சூடு வழக்கு வழக்கை சிபிஐ விசாரிப்பதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது ஏன். அரசின் நிலைப்பாடு சரியாக தெரியவில்லை.
பெரிய குழப்பம்
ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசின் நிலைப்பாடு குழப்பமாக உள்ளது. இதுகுறித்து அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வரும் பிப்ரவரி 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது, என்று நீதிமன்றம் கூறியுள்ளது.