சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் வென்றால் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி அமைந்துள்ள இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று என்டிஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி விளக்கம் கொடுத்துள்ளார். தனது பெயரை பயன்படுத்தி அனுமதியின்றி சிலர் தவறான தகவலை திட்டமிட்டே பரப்பி இருப்பதாகவும் சுந்தர்.சி கூறியுள்ளார்.
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி சார்பாக என்டிஏ கூட்டணி வேட்பாளராக இயக்குநர் சுந்தர்.சி போட்டியிடுகிறார். மதுரை மத்திய தொகுதியில் வெள்ளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமாக இருப்பதால், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை எதிர்த்து களமிறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனால் அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்தித்து இயக்குநர் சுந்தர்.சி ஆதரவு கோரி வருகிறார். இவருக்காக அதிமுக தரப்பில் முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி ஆகியோர் பணியாற்ற தொடங்கியுள்ளனர். அதேபோல் மதுரை மத்திய தொகுதியில் கணிசமான தொழில்களை மேற்கொண்டு வரும் செட்டியார் மற்றும் விஸ்வகர்மா சமூக நிர்வாகிகளின் ஆதரவையும் கோரி இருக்கிறார்.
சமூக ரீதியிலான வாக்குகளை தங்கள் பக்கம் மாற்ற வேண்டும் என்பதே சுந்தர்.சி தரப்பின் முதன்மை நோக்கமாக உள்ளது. மறுபக்கம் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இதே தொகுதியில் 10 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறார். 3வது முறையாக இந்த தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுவதால், அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சோசியல் மீடியாவில் மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர்.சி வென்றால், மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள இறைச்சி கடைகள் மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சில தகவல் வெளியாகியது. இது மதுரை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் மதுரையில் இறைச்சி கடைகளை மூடப்படும் என்று பேசினால், 1% மக்களின் ஆதரவு கூட கிடைக்காது.
இந்த நிலையில் இயக்குநர் சுந்தர்.சி விளக்கம் கொடுத்துள்ளார். அதில் சுந்தர். சி பேசுகையில், மதுரை மத்திய தொகுதியில் வென்றால் மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி அமைந்துள்ள இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்று பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது. தனது பெயரை பயன்படுத்தி அனுமதியின்றி சிலர் தவறான தகவலை திட்டமிட்டே பரப்பி இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications