ஓமிக்ரான் எதிரொலி.. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஓமிக்ரான் சிறப்பு வார்டு.. தமிழக அரசு நடவடிக்கை
மதுரை: ஓமிக்ரான் உருமாறிய கொரோனா குறித்த அச்சம் அதிகரித்து வரும் நிலையில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பை இதுவரை எந்த நாடும் முழுமையாக ஒழித்துவிடவில்லை. இருப்பினும், கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது.
இதனால் பல்வேறு நாடுகளும் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. இந்தச் சூழலில் தான் நவம்பர் மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது.

ஓமிக்ரான் கொரோனா
ஓமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனாவை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனாவாக பட்டியலிட்டுள்ளது. நேற்று வரை 12 நாடுகள் மட்டுமே இந்த புதிய ஓமிக்ரான் கொரோனா கண்டறியப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் அது இரட்டிப்பாகியுள்ளது. இதுவரை சுமார் 23 நாடுகளுக்கும் மேல் புதிய ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

2 பேருக்கு ஓமிக்ரான்
குறிப்பாக, இந்தியாவிலும் கர்நாடக மாநிலத்தில் வெளிநாடு பயணி ஒருவர் உட்பட 2 பேருக்கு ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், ஓமிக்ரான் கண்டறியப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கும் கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர்கள் மாதிரிகள் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓமிக்ரான் பாதிப்பு நாட்டில் அதிகரிக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

நடவடிக்கை
ஓமிக்ரான் அச்சம் ஒருபுறம் அதிகரித்துள்ள போதிலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தே வருகிறது. குறிப்பாகத் தமிழகத்திற்கு வெளிநாடுகளிலிருந்து பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அமைச்சர் மா.சு
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்குச் சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். சென்னையைக் காட்டிலும், ஆபத்தான நாடுகள் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து அதிக பயணிகள் திருச்சிக்குத்தான் வருகிறார்கள். எனவே பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்பட வேண்டியது அவசியமான ஒன்று. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் ரிசல்ட் வந்த பின்னர் வெளியேற அனுமதிக்கப்படுவர்.

தீவிர சோதனை
அதன் பின்னர் அவர்கள் 7 நாட்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும். அவர்கள் காவல்துறையினரால் கண்காணிக்கப்படுவார்கள். பின்தங்கிய நிலையில் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவசமாக டெஸ்ட் எடுக்கப்படும். மேலும். மதுரையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது" என்றும் அவர் தெரிவித்தார்.

சிறப்பு வார்டு
அதன்படி மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 30 படுக்கைகள் கொண்ட ஒமிக்ரான் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அதி தீவிர சிகிச்சை அளிக்கும் வகையில் இந்த சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்டில் நோயாளிகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கும் வகையில் 16 பேர் கொண்ட மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது.












Click it and Unblock the Notifications