விஜயால் ஜெயிக்க முடியாது.. கட்சி தொடங்கி பிரயோஜனம் இல்லை! ரசிகர்களை டென்ஷனாக்கிய ரஜினி அண்ணன்
மதுரை: ‛‛நடிகர் விஜய் கட்சி தொடங்கி பிரயோஜனம் இல்லை. ஒன்றும் சாதிக்க முடியாது. அவரால் ஜெயிக்க முடியாது'' என்று நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார். இது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தி உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். தமிழகத்தில் 2026ம் ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலை குறிவைத்து நடிகர் விஜய் சினிமாவை விட்டு முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார். தற்போது அவர் கடைசி படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு முழுநேர அரசியலில் விஜய் கவனம் செலுத்த உள்ளார்.
இதற்கிடையே தான் கடந்த மாதம் 27 ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடந்தது. ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இந்த மாநாட்டில் கட்சியின் கொடி விளக்கம், கொள்கைகள் வெளியிடப்பட்டது. நடிகர் விஜயும் தான் மேற்கொள்ளப்போகும் அரசியல் மற்றும் கட்சியின் கொள்கைகள் பற்றி பேசினார்.
நடிகர் விஜய் பாஜகவை பிளவுவாத கட்சி எனவும், தமிழகத்தை ஆளும் திமுகவை ஊழல் கபடதாரிகள் என்றும் விமர்சனம் செய்தார். அதோடு கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக என்றும் மேடையில் அறிவித்தார். அதுமட்டுமின்றி திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் என்று கூறியிருந்தார். அதுமட்டுமின்றி கூட்டணிக்கு வந்தால் ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
நடிகர் விஜயின் இந்த பேச்சால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. பாஜகவினர், திமுகவினர் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியினர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் கூட்டணிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்தது, அதிகாரத்தில் பங்களிப்பதாக விஜய் தெரிவித்து இருப்பதை கூட விசிகவின் திருமாவளவன் விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி தொடங்கி இருப்பது பற்றி நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணராவ் மதுரையில் நேற்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‛‛வரட்டும்.. வரட்டும்.. கமல்ஹாசன் பண்ணியது போல் அவரும் பண்ணட்டும். எல்லாருக்கும் உரிமை உள்ளது. அவர் ஆசைப்பட்டுள்ளார். ஆனால் பண்ணக்கூடாது.
இதை செய்து பிரயோஜனம் இல்லை. ஒன்றும் சாதிக்க முடியாது. சரி யோசித்து செய்யட்டும். ஆனால் முடியாது. தமிழ்நாட்டில் முடியாது. விஜய் இப்போது ஆசைப்பட்டுள்ளார். இன்னும் கொஞ்சநாள் போகட்டும் பார்க்கலாம். ஜெயிக்க முடியாது. கஷ்டம்'' என்றார். சத்யநாராயணராவின் இந்த கருத்து தற்போது விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது தொண்டர்களை டென்ஷனாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications