திருப்பரங்குன்றம்: தீபம் ஏத்துறீங்களோ இல்லையோ..நீதிமன்றத்தை பரபரப்பா வச்சுருக்கீங்க..நீதிபதி டென்சன்
மதுரை: திருப்பரங்குன்ற மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. முக்கிய வாதங்கள் நடைபெற்ற நிலையில், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுகிறீர்களோ இல்லையோ நீதிமன்றத்தை பரபரப்பாக வைத்துள்ளீர்கள் என்று நீதிபதி கோபத்துடன் கூறினார்.
மேலும், சட்ட ஒழுங்கை காரணம் காட்டி உத்தரவை நிறைவேற்றாமல் இருக்க கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாதற்கு உரிய பதிலை சொல்லியே ஆக வேண்டும் என்றும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறினார்.

முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும் நிலையில், அது வழக்கமாக அங்குள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும். ஆனால், கார்த்திகை தீபத்தையொட்டி மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என ராமரவிக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.
திருப்பரங்குன்றம் வழக்கு
ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இந்த மனுவை விசாரித்து, மலை உச்சியில் தீபமேற்ற உத்தரவிட்டார். ஆனாலும், உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே இந்த ஆண்டு தீபம் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக இப்போது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது. முதலில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரதான வழக்கின் மேல்முறையீடு. இதை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரிக்கின்றனர்.
மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த தவறியதாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தனியாக உள்ளது. இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனே விசாரிக்கிறார். இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் இந்த வழக்கை விசாரித்தார்.
நீதிமன்றத்தில் ஆஜர்
மாநகர் காவல் ஆணையர் லோகநாதன், மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர். தமிழக அரசின் தலைமைச் செயலர் முருகானந்தம், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோர் வீடியோ கால் மூலமாக ஆஜராகினர்.
அப்போது பேசிய நீதிபதி, நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவுகளை அதிகாரிகள் மீறியுள்ளனர், அவமதித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் மதிக்கவில்லை என்றால் சட்டத்தின் ஆட்சி என்ற கருத்து அர்த்தமற்றதாகி விடும். இதற்கு அதிகாரிகள் பதில் சொல்லியாக வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் 144 தடையாணை பிறப்பித்துள்ளனர்.
பரபரப்பான நீதிமன்றம்
இது முக்கியமான விவகாரம். நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றவில்லை என்று விளக்கம் அளிக்க வேண்டும். தீபம் ஏற்றுகிறீர்களோ இல்லையோ நீதிமன்றத்தை பரபரப்பாக வைத்துள்ளீர்கள். சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது.
நீதிமன்ற உத்தரவுகள் நிறைவேற்றப்படாதது குறித்து உரிய பதில் மனுவை தமிழக தலைமைச் செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கின் விசாரணை ஜனவரி 9 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications