தீபம் ஏற்றும் விஷயத்தில் முழு அதிகாரம்.. கோயில் நிர்வாகத்திற்குதான் இருக்கிறது! தமிழக அரசு வாதம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் வழக்கில் ஒரு மனுதாரரின் கோரிக்கையை மட்டும் கவனத்தில் கொள்ளக்கூடாது என்று தமிழ்நாடு அரசு வாதங்களை முன்வைத்து வருகிறது. மட்டுமல்லாது விளக்கேற்றும் விஷயத்தில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமே முழு அதிகாரம் இருக்கிறது என்றும் கூறியுள்ளது.
இந்த விவகாரத்தில் ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோயில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் என இருநீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்திருக்கிறது. இதில் தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கிறது.

"ஒரு மனு தாரர் வாதத்தை பிரதான வாதமாக எடுக்க கூடாது. இந்த விவகாரத்தில் மத நல்லிணக்கம் மற்றும் பொது அமைதியை கருத்தில் கொள்ள வேண்டும். கடந்த 1920ம் ஆண்டு தொடங்கி இதுவரை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். விளக்கேற்றும் விவகாரத்தில் கோயில் நிர்வாகமே இறுதி முடிவை எடுக்க வேண்டும். மலை உச்சியில் தீபம் ஏற்ற கோயில் நிர்வாகம்தான் அனுமதி வழங்க வேண்டும். தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்திற்கு அருகில் தர்கா இருக்கிறது.
எனவே வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்தில் இந்த ஆண்டும் தீபம் ஏற்றப்பட்டது. இதைவிட முக்கியமானது, தீபம் ஏற்ற கோரும் தூண், தீப தூண் அல்ல. அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. கடந்த 73 ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோயில் அருகேதான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. முதன்முறையாக 1994ம் ஆண்டுதான் இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 2014ம் ஆண்டு இந்த வழக்கில் விரிவான தீர்ப்பு வந்திருக்கிறது.
தற்போதைய வழக்கில் 3 நாட்களுக்கு முன் உத்தரவை கொடுத்து நடைமுறைப்படுத்த சொன்னால் எப்படி செய்வது?" என்று தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "திருப்பரங்குன்றம் தூண் சர்வே தூண் தானா? உறுதி செய்திருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பினர். "ஆம் அது சர்வே தூண்தான். மலையில் நெல்லித்தோப்பு, தர்கா உள்ளிட்டவை தர்காவுக்கு சொந்தமானது. மற்றவை கோயிலுக்கு சொந்தமானது" என்று தமிழக அரசு தரப்பு தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications