திருப்பரங்குன்றம்..ஹைகோர்ட் வளாகத்தில் ராம ரவிக்குமாரின் வழக்கறிஞர் தமிழக அரசு மீது பரபரப்பு புகார்
மதுரை: திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று மனுதாரர் ராம ரவிக்குமார் வழக்கறிஞர் நிரஞ்சன் குற்றச்சாட்டியுள்ளார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளரை சந்தித்த வழக்கறிஞர் நிரஞ்சன் கூறுகையில், "தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அரசு பின்பற்றவில்லை மாறாக அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளது. அரசாங்கம் பொதுவானதாக செயல்பட வேண்டும். ஆனால், ஓட்டுக்காகவா, தேர்தலுக்காகவா இப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு தரப்பு மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அடங்கிய அமரும் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அங்கு நடைபெற்ற விதி மீறல்கள், காவல்துறை மீதான தாக்குதல் எந்த மாதிரியான சிக்கலை அரசு எதிர்கொண்டது உள்ளிட்டவற்றை நீதிபதிகள் முன்பாக சுட்டிக்காட்டப்பட்டது. அதேபோல மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பிலிருந்து ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் நீதிபதி உத்தரவை அமல்படுத்தாமல் அரசு அதனை தடுத்து நிறுத்தி இருப்பதாகவும் 144 தடை உத்தரவை சுட்டிக்காட்டி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்றம் விடவில்லை என வாதங்களை முன் வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இது குறித்து உத்தரவு அளிக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து தீர்ப்பளித்த நீதிபதிகள், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய மறுத்துவிட்டனர். உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தான் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிப்பார் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீண்டும் விசாரிக்க உள்ளார்.
முன்னதாக தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட போது, பிற்பகலில் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளரை சந்தித்த மனுதாரர் ராம ரவிக்குமார் வழக்கறிஞர் நிரஞ்சன் கூறுகையில், "தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை அரசு பின்பற்றவில்லை மாறாக அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளது. அரசாங்கம் பொதுவானதாக செயல்பட வேண்டும். ஆனால், ஓட்டுக்காகவா, எலக்சன்காகவா இப்படி செயல்படுகிறது என்று தெரியவில்லை. நேற்று நிகழ்வின் போது ஒரு இஸ்லாமியர் கூட ஆதரவாகவோ எதிராகவும் செயல்படவில்லை. சில விஷயங்களை இந்த சமுதாயத்தில் ஈடுபட அமைதியை குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு உள்ளனர்.
காலையில் மலை உச்சியில் உள்ள தூண் மீது தீபம் ஏற்ற தூய்மை பணியை செய்தார்கள் மாலையில் அதனை நிறுத்தி விட்டார்கள் இந்த அரசு இந்து மதத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது. எங்களது தரப்பையும் வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் விரைவில் இதன் மீது உத்தரவு வழங்கப்படும் என கூறியிருக்கிறார்கள் நல்ல தீர்ப்பு வரும் என நாங்கள் காத்திருக்கிறோம் " என்றார். இந்த வழக்கில் மனுதாரர் ராம ரவிக்குமாருக்கு சாதகமாகவே தீர்ப்பு உயர்நீதிமன்றத்தில் வந்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசின் மேல்முறையிட்டு மனுவிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பின்பற்ற தவறிய மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக செயல்பட்டதாக மாவட்ட நிர்வாகம் மீது அவமதிப்பு முறையீடுகள் பதிவு செய்யப்பட்டது. அதற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் மூலம் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கில் மாவட்ட நிர்வாகத்தின் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. எனவே நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications