'அனாதையாக நிற்கிறோம், நீதி நிலைநாட்டப்படும் என நம்புகிறோம்..' பென்னிக்ஸ் தாயார் கண்ணீர் பேட்டி
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் வாக்குமூலம் அளித்த பென்னிக்ஸ் தாயார் செல்வராணி, யாருடைய ஆதரவும் இல்லாமல் நிற்பதாகவும் விரைவில் நீதிமன்றம் மூலமாக விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என நம்புவதாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அப்போது சிறையில் வைத்து இருவரையும் போலீசார் கொடூரமாகத் தாக்கியதில் இருவருமே அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சாத்தான்குளம்
இது வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜ், காவலர்கள் செல்லதுரை, வெயிலுமுத்து, தாமஸ் பிரான்சிஸ் , சமயதுரை உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று மீண்டும் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணை
அப்போது இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதனிடையே இந்த வழக்கின் முக்கிய சாட்சியான ஜெயராஜின் மனைவி செல்வராணி நீதிபதி முன்பாக 1 மணி சாட்சியம் அளித்தார். அதைத் தொடர்ந்து அவரிடம் குறுக்கு விசாரணையும் நடத்தப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்

நல்ல தீர்ப்பு கிடைக்கும்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வராணி, "எனது கணவர் மற்றும் மகன் கடைக்குச் செல்லும் முழு உடல் நலத்துடனேயே இருந்தனர். வீட்டிலிருந்து புறப்படும் போது பார்த்தேன், பின்னர் அவர்களை உயிரற்ற நிலையிலேயே பார்த்தேன். நாங்கள் இப்போது யாருடைய ஆதரவும் இல்லாமல் நிற்கிறோம். நீதிக்காக நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். நீதிமன்றம் மூலமாக விரைவில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்" எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்

உச்ச நீதிமன்றம்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் சாத்தான்குளம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனாவால் மரணமடைந்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் போலசார் என்பதால் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தாக உள்ளது. முன்னதாக வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற கவலை உள்ளதால், வழக்கு விசாரணையைக் கேரளத்தில் உள்ள திருவனந்தபுரத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கைது செய்யப்பட்டவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications