திருப்பரங்குன்றம் தீப விவகாரம்.. தீர்ப்பை வைத்து கலவரம் செய்ய முயற்சி! அரசு தரப்பு வைத்த வாதம்!
மதுரை: கார்த்திகை தீபத் திருவிழா அன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றலாம் என்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அப்போது நீதிமன்ற தீர்ப்பை வைத்து மனுதாரர் கலவரம் செய்ய முயன்றதாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் ஒன்பதாம் நாளான நேற்று திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.
விழாவையொட்டி அடிவாரத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகர்களால் பால தீபம் ஏற்றப்பட்டதும், மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் தீப தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்கிடையே மலை உச்சியில் உள்ள கார்த்திகை மகா தீபத்தூரில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள கார்த்திகை தீப தூணில் தீபத்தை ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் கோவில் நிர்வாகம் இதனை செயல்படுத்தாத நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் உதவியோடு மனுதாரர் மலையில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து மனுதாரர் ராம ரவிக்குமார் அவரது வழக்கறிஞர்கள் சிஐஎஸ்எப் பாதுகாப்பு வீரர்களுடன் கோவிலுக்கு வந்தனர்.
மேலும் அங்கு ஏற்கனவே இந்து முன்னணியினர் பாஜகவினர் நூற்றுக்கணக்கில் கூடியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறையினரின் தடுப்புகளை மீறி இந்து அமைப்பினர் முயற்சித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பதற்றமான சூழல் உருவானதால் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டது. இந்நிலையில் தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்யக் கூறி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வை தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது.
அப்போது பல்வேறு வாதங்களை தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்கள் எடுத்து வைத்தனர். குறிப்பாக," தனி நீதிபதியின் தீர்ப்பை தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் மதப் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவானது. நீதிமன்ற உத்தரவை வைத்துக்கொண்டு மனுதாரர் தரப்பு கலவரம் செய்துள்ளது. இதில் இரண்டு காவலர்கள் காயம் அடைந்து இருக்கிறார்கள். தனி நீதிபதியின் உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
சிஐஎஸ்எப் வீரர்கள் நீதிமன்ற பாதுகாப்புக்காக உள்ளவர்கள். அதிகார வரம்பு நீதிமன்றத்திற்கு மட்டுமே அவர்களை மனுதாரரின் பாதுகாப்புக்காக அனுப்பியது தவறு. அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் உத்தரவை நிறைவேற்றாதது ஏன் அதற்கான விளக்கத்தை மட்டும் தான் கேட்க முடியும். ஆனால் அவமதிப்பு வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை மீறி தனி நீதிபதி உத்தரவை பிறப்பித்துள்ளார்" என தமிழக அரசு வாதத்தை முன் வைத்தது.












Click it and Unblock the Notifications