ரயிலுக்காக காத்திருக்கும் மயில்கள்.. 1977ல் முதல் இதே 'மயிலு' தான் தன் காதலனுக்காக காத்திருக்கிறதா?
மதுரை: ரயில்களை எதிர்பார்த்து நிற்கும் மயில் என்று தலைப்பிட்டு மதுரை ரயில்வே கோட்டம் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தது. அந்த புகைப்படத்தில் ரயிலுக்காக அழகான ஒரு மயில் காத்திருந்தது. அந்த பதிவிற்கு கீழ் இன்னொரு மயில் ரயிலுக்காக காத்திருந்த படத்தை நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதற்கு அவர் கொடுத்த கேப்சன் தான் அழகானது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையங்களும் பல்வேறு கதைகளை சுமந்து கொண்டு, பலரது நினைவுகளின் சாட்சியாக நிற்கின்றன. தமிழ்நாட்டில் ஓடும் ரயில் நிலையங்களும், ரயில்களும் இங்குள்ள பலரது வாழ்வில் நடந்த மறக்க முடியாத நினைவுகளை சுமந்து நிற்கின்றன.

ரயில் நிலையங்களில் பயணிகள் காத்திருக்கும் நிமிடங்களில் பல கனவுகளுடன் இருப்பார்கள். எப்படியாவது ரயில்களில் ஏறிவிட வேண்டும், எப்படியாவது போக வேண்டிய இடத்திற்கு சரியாக போய்விட வேண்டும். பெற்றோரை பார்க்க வேண்டும், மனைவியை பார்க்க வேண்டும் என்று பல்வேறு எதிர்பார்ப்புடன் ரயிலுக்காக காத்திருப்பார்கள். இன்று வேண்டுமானால் ரயிலில் மக்கள் அடிக்கடி சென்னைக்கு போய் வருகிறார்கள்.
தொலைபேசியில் வீடியோ காலில் பேசிக்கொள்கிறார்கள். அந்த காலத்தில் அப்படி அல்ல.. ஊரில் இருந்து உறவுகள் வரப்போகின்றன. அதுவும் பலவருடம் கழித்து, பார்க்காமல் பேசாமல் இருந்த உறவுகள் வரப்போகின்றன என்று அவர்களுக்கு உறவினர்கள் ரயில் எப்போது தான் வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள். அது மிகவும் அழகிய காலம்..
சரி விஷயத்திற்கு வந்துவிடுவோம்.. ரயில்களுக்காக ஹீரோ அல்லது ஹீரோயின் காத்திருக்கும் காட்சிகள் அந்த கால படங்களில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கும். அப்படிப்பட்ட காட்சிகள் உள்ள ஒரு படம் தான் 16 வயதினிலே, 1977 இல் பாரதிராஜா இயக்கிய இந்த படம் இன்றும் தமிழ் சினிமா பொக்கிஷங்களில் முக்கியமானது. பரட்டையை (ரஜினியை) கொன்றுவிட்டு சிறைக்கு போன சப்பாணியை ( கமல்ஹாசன்) எப்படியும் திரும்ப வருவார் என்று மயிலு (ஸ்ரீதேவி) காத்திருப்பார். இந்த காட்சியை படம் பார்த்த யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். மயிலு தினமும் ரயிலுக்காக காத்திருப்பதாக படம் சொல்லும் சேதியாக இருக்கும்.கடைசி வரை சப்பாணி வந்தாரா என்பதை பாரதிராஜா காட்டியிருக்க மாட்டார். மயிலு ரயிலுக்கு காத்திருப்பதாக படம் ஆரம்பித்து, ரயிலுக்கு காத்திருப்பதாகவே படம் முடியும்
இந்நிலையில் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் ரயில் வருகிறதா என உற்று நோக்கும் மயிலின் எழிலான காட்சியினை மதுரையில் ஓய்வு பெற்ற ரயில்வே பயணச்சீட்டு கண்காணிப்பாளர் முத்தையாக அழகாக படமெடுத்து மதுரை ரயில்வே கோட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த படத்தை மதுரை ரயில்வே கோட்டம் drmmadurai என்ற தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டிருந்தது. அந்த பதிவிற்கு கீழ் இன்னொரு மயில் ரயிலுக்காக காத்திருந்த படத்தை நெட்டிசன் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் இதே "மயிலு" 1977ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான "16 வயதினிலே" காதலனுக்காக காத்திருக்கிறதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications