”மத்திய அரசின் டிசைன்” ரயில்களுக்கும் வாய் தான் உண்டு.. காதுகள் இல்லை.. சு.வெங்கடேசன் கிண்டல்!
ரயில்களுக்கும் வாய்தான் உண்டு, காதுகள் இல்லை என்று சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
மதுரை: ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்தார். இதனை குறிப்பிட்டு மத்திய அரசின் டிசைன்களில் ஒன்றாக ரயில்களுக்கும் வாய்தான் உண்டு காதுகள் இல்லை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
அதேபோல் மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில சட்டப்பேரவை சட்டம் இயற்ற அதிகாரமில்லை என்று பதில் அளித்துள்ளார். இது தமிழ்நாடு அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடை மசோதா
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியதால், ஆளுநர் ஆர்.என்.ரவியை பல்வேறு அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக, பாமக, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் அமமுக உள்ளிட்ட ஏராளமான கட்சிகள் விமர்சித்துள்ளனர். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநரின் நடவடிக்கைக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

மு.க.ஸ்டாலின் விமர்சனம்
இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்களில் ஒருவன் வீடியோ மூலம் ஆளுநர் பற்றிய கேள்விக்கு அளித்த பதில் மக்களின் கவனத்தைப் பெற்றது. அதில் ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்று அண்மையில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதே... மத்திய பாஜக அரசின் ஆளுநர்கள் இதற்கு செவிமடுப்பார்கள் என நினைக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

காதுகள் இல்லை
அதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுவரையிலான செயல்பாடுகளைப் பார்த்தால், ஆளுநர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது என்று பதில் அளித்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், முதல்வர் இப்படி பதில் கூறியது நேரடி விமர்சனமாக பார்க்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே ஆலோசனை
இந்த நிலையில் தென்மாவட்ட ரயில்வே திட்டங்கள் குறித்து தென்மாவட்ட எம்.பி-க்களுடன் மதுரை ரயில்வே அலுவலகத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் வைகோ, சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர், ரவீந்திரநாத் மற்றும் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய ரயில்கள் இயக்கவும், ரயில் சேவை நீட்டிப்பு, ரயில் சேவை அதிகரிப்பு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.

சு.வெங்கடேசன் கிண்டல்
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இரயில்களுக்கும் வாய் தான் உண்டு. காதுகள் இல்லை"
ஒன்றிய அரசின் டிசைன் ஒன்று போல் இருப்பது பற்றியும் இன்றைய தெற்கு இரயில்வேயின் எம் பிக்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார். நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர்கள் குறித்து பேசிய வார்த்தைகள் சு.வெங்கடேசனும் பயன்படுத்தி விமர்சித்தது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications