முதல்வர் வேட்பாளரை மாற்றுங்க.. பாஜக கூட்டணியில் உடனே இணைகிறோம்.. டிடிவி தினகரன் போட்ட கண்டிஷன்!
விருதுநகர்: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால், மீண்டும் கூட்டணியில் இணையத் தயார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிபந்தனை விதித்துள்ளார். அதேபோல் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறிய டிடிவி தினகரன், அமைதிப் பூங்காவாக இருக்கும் தென் தமிழ்நாட்டை சீர் குலைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. இதனையொட்டி அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தான் தலைவர் என்று அமித்ஷா அறிவித்தார். இதன்பின் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் பாஜக சில சர்ச்சைகளை உருவாக்கினாலும், தற்போது எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி உருவான போது, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தாங்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்காக நான் தேர்தலில் பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கான சிக்னலையும் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருந்தார். அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு இடம் அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்த போது, அதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்று எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார். இதனால் அமமுகவை சேர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இருந்ததாக புரிந்து கொள்ளப்பட்டது.
டிசம்பர் இறுதியில் இந்த கூட்டணி உறுதியாக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், என்டிஏ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தவரை கூட்டணி கட்சிகளை சரியாக கையாண்டதாகவும், நயினார் நாகேந்திரனுக்கு கையாள தெரியவில்லை என்றும் விமர்சித்தார்.
இதனால் நயினார் நாகேந்திரன் மற்றும் டிடிவி தினகரன் இடையில் மோதல் ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து டிடிவி தினகரன் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை மாற்றினால், மீண்டும் கூட்டணியில் இணையத் தயார். அதிமுகவை ஒருங்கிணைக்க அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையனின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
அதேபோல் அமைதிப் பூங்காவாக உள்ள தென் தமிழ்நாட்டின் அமைதியை சீர் குலைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறார். அதேபோல் சமரசம் பேசுவதாக கூறி இருக்கும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரனின் இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் என்று பலரும் குழப்பம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications