ஸ்பாட்டுக்கு வாங்க.. நாங்கதான் அடுத்த கவுன்சிலர்.. தவெக ஆட்டத்தால் அதிருப்தியில் அரசு ஊழியர்கள்!
மதுரை: மதுரையில் கவுன்சிலர் சீட் பெறுவதற்காக தவெக நிர்வாகிகள் பல வகையான ரீல்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் மக்கள் பிரதிநிதிகளை தவிர வேறு யாரும் ஆய்வு செய்யக் கூடாது என்று உத்தரவிட்டும், வட்டச் செயலாளர்கள் பலரும் இதுவரை அடங்கவில்லை. ஒரு சில நிர்வாகிகள் அரசு அதிகாரிகளை, அடுத்த கவுன்சிலர் நாங்கதான்.. ஸ்பாட்டுக்கு வாங்க என்று வார்டு பிரச்சனைகளுக்கு பேசி ரீல்ஸ்களாக வெளியிடுவதை தொடர் கதையாக்கி வருகின்றார். இதனால் அரசு அதிகாரிகள் என்ன செய்வதென தெரியாமல் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்துள்ள தவெக, அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தலில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறது. இதன் காரணமாகவே மாற்று கட்சியில் இருக்கும் நிர்வாகிகளை தங்கம் பக்கம் இழுப்பதில் தவெக தீவிரமாக இருக்கிறது. அந்த வகையில் மதுரையில் கவுன்சிலர் சீட்டை கைப்பற்ற தவெக நிர்வாகிகள் பல்வேறு வகையான ரீல்ஸை வெளியிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு வார்டிலும் வட்டச் செயலாளர்கள் இப்போதே சீட் பெற காய் நகர்த்த தொடங்கியுள்ளனர். மதுரையில் சிடிஆர் நிர்மல்குமார், கல்லாணை மற்றும் தங்கப்பாண்டியன் ஆகிய மூவருக்கும் இடையில் போட்டி நிலவி வருகிறது. கவுன்சிலர் சீட் ஒதுக்குவதில் சிடிஆர் நிர்மல்குமாரின் கை ஓங்கி இருந்தாலும், அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் ஆதரவாளர்களும் எளிதாக விட்டுக் கொடுப்பதாக இல்லை.
தவெக நிர்வாகிகளின் கவுன்சிலர் சீட்டுக்கான போட்டியில் அல்லல்படுவது அரசு அதிகாரிகள் தான். ஏனென்றால் தவெக தலைமை மக்கள் பிரதிநிதிகளை தவிர்த்து வேறு யாரும் ஆய்வு செய்யக் கூடாது என்று அறிவுறுத்தியும் தவெக நிர்வாகிகள் கேட்பதாக இல்லை. சொட்டு மருந்து கொடுக்கும் விவகாரத்தில் கூட மதுரையில் தவெக நிர்வாகிகள் ஒரு ஆட்டம் ஆடினர் என்றே சொல்லலாம்.
ரீல்ஸ் மோகத்தில் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க போட்டா போட்டி நடந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் சிட்டிங் கவுன்சிலர் பங்கேற்ற விழாக்களில் தங்களை ஏன் அழைக்கவில்லை என்று அரசு அதிகாரிகளை தவெகவினர் ஒரு வழி செய்ய தொடங்கி இருக்கின்றனர். இப்படி ரீல்ஸ் வெளியிடும் போது அரசு உயர் அதிகாரிகளுக்கு ஊழியர்கள் விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
ஆனால் தவெகவினர் இதனை கண்டு கொள்வதில்லை. ஒவ்வொரு நாளில் ரீல்ஸ் கண்டெண்ட் பிடித்து வெளியிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். ஒரு சில வார்டுகளில் பிரச்சனையை புகாராக கொடுக்காமல், எம்எல்ஏ பெயரைக் கூறி "ஸ்பாட்டுக்கு வாங்க.. நாங்கதான் அடுத்த கவுன்சிலர்" என்று தவெகவினர் உத்தரவிட தொடங்கி இருப்பதாகவும் அரசு ஊழியர்கள் புலம்ப தொடங்கியுள்ளனர்.
அந்தப் புகாருக்காக அங்கு செல்லும் போது, அரசு ஊழியர்களை சேர்த்து வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்டுவிடுகிறார்கள். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடையும் சூழலில், அதுவரை தவெக நிர்வாகிகளின் ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என்று இப்போதே அரசு ஊழியர்கள் புலம்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications