முழு மலையும் முருகனுக்கே சொந்தமாம்.. திருப்பரங்குன்றத்தில் திடீர் பரபரப்பை கிளப்பிய எல்.முருகன்!
மதுரை: பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே திருப்பரங்குன்றம் மலை மீது இருக்கும் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் செல்ல வேண்டுமென பாஜகவினர், போலீசாருடன் கடும் வாக்குவாதம் செய்த நிலையில் ஐந்து பேரை மட்டுமே மலைக்குச் செல்ல போலீசார் அனுமதித்தனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது. அங்கு தமிழகம் முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தரிசனம் செய்கின்றனர்.

இந்த நிலையில் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிட வேண்டும் என இஸ்லாமிய மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு ஆடு கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் சென்ற வக்பு வாரிய தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் ராமநாதபுரம் எம்பியுமான நவாஸ் கனி குறிப்பிட்ட சில அமைப்புகளுடன் அங்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் பிரியாணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த புகைப்படத்தை நவாஸ் கனியும் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலையைக் காக்க போராட்டம் நடைபெறும் என இந்து முன்னணி அறிவித்திருந்தது. அதில் பல இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த விவகாரம் அமைதியாக இருந்த நிலையில் கோவிலுக்கு பொதுமக்களை தவிர அரசியல் கட்சியினர் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென மத்திய அமைச்சர் எல்.முருகன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நிலையில் மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என தெரிவித்தார். ஆனால் அரசியல் கட்சியினர் மலை மீது செல்ல அனுமதி இல்லை என போலீசார் திட்டவட்டமாக கூறினார். ஆனால் முருகனுடன் வந்தவர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஐந்து பேரை மட்டுமே மலைக் கோவிலுக்கு செல்ல போலீசார் அனுமதித்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன்," தொடர்ந்து இந்த பகுதியில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 1931ல் 33 செண்டை தவிர ஒட்டு மொத்த மலையும் முருகப்பெருமானுக்கு சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் 1983ல் வருவாய் ஆவணங்களில் உள்ள பதிவுகளில் தமிழ்நாடு அரசு சிக்கந்தர் மலை என்று தவறாக குறிப்பிட்டுள்ளது.
வருவாய்த்துறை ஆவணங்களில் திருப்பரங்குன்றம் மலை என்று தான் இருக்க வேண்டும். இந்த ஆண்டு கார்த்திகை தீபத்தை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஏற்ற முன்வர வேண்டும். இந்த கோவில் சைவ திருத்தலம். சைவ வைணவ தலங்களில் பலி கொடுப்பது கிடையாது. சிலர் விரும்பத்தகாத சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.












Click it and Unblock the Notifications