தமிழகத்தில் எந்த டோல்கேட்டிலும் இல்லாத கட்டணம்.. மதுரை நத்தம் சாலையில் வாகன ஓட்டிகள் பெரிய சம்பவம்
மதுரை: தமிழ்நாட்டில் எந்த சுங்கச்சாவடியிலும் இல்லாத ஒன்றாக மதுரை நத்தம் சாலை சுங்கச்சாவடியில் காருக்கு 180 ரூபாயும், லாரிக்கு 660 ரூபாயும், பேருந்துக்கு 605 ரூபாயும் ஒரு முறை பயணிக்க கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் முற்றுகையிட்டனர்.
மத்திய அரசின் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மதுரை மாநகர் தல்லாக்குளத்தில் இருந்து, நத்தம், துவரங்குறிச்சி, திருச்சி வழியாக சென்னை செல்வதற்கு நான்கு வழிச்சாலை போடப்பட்டிருக்கிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். தமிழ்நாட்டின் நீண்ட மேம்பாலம் உள்ள சாலை என்ற அடையாளத்துடன் ரூ.1,744 கோடியில் மதுரை - நத்தம் நான்கு வழிச்சாலை புதிதாக போடப்பட்டுள்ளது.

இந்த புதிய சாலை, துவரங்குறிச்சியில் இருந்து நத்தம் வரை 25.5 கி.மீ தூரத்திற்கும். நத்தத்தில் இருந்து மதுரை வரை 35.5 கி.மீ தூரத்திற்கும் நான்கு வழிச்சாலையாக போடப்பட்டுள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் மதுரையில் மேம்பாலத்துடன் செல்லும் இந்த சாலையில் பயணித்தால் திருச்சி மற்றும் திண்டுக்கல் செல்ல பயண நேரம் வெகுவாக குறையும்.
இதன் காரணமாக சென்னையில் இருந்து மதுரைக்கு வரும் வாகனங்கள் திருச்சியில் இருந்து துவரங்குறிச்சி, கொட்டாம்பட்டி, மேலூர் வழியாக மதுரைக்கு வேகமாகவும் எளிதாகவும் வந்தன. அதேபோல் மதுரை ஆரப்பாளையம், கொடைரோடு வழியாக திண்டுக்கல் சென்ற பலர், அந்த சாலைகளை தவிர்த்து, மதுரை-நத்தம் நான்கு வழிச்சாலையில் எளிதாக பயணித்தார்கள். சாலை அமைத்ததில் இருந்து சுங்ககட்டணம் வசூலிக்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக நத்தம் சாலையில் திண்டுக்கல் மற்றும் திருச்சி செல்வோர் ஆர்வமுடன் பயணித்தனர்.

ஆனால் திடீர் திருப்பமாக மதுரை நத்தம் நான்கு வழிச்சாலையில் சுங்க கட்டணம் கடந்த பிப்ரவரி 8ம் தேதியில் இருந்து வசூலிக்க தொடங்கியுள்ளது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.. மதுரை நத்தம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கார் மற்றும் டிராக்டருக்கு ரூ.180 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மினி வேன், டெம்போ டிராவல்ஸ் வாகனத்திற்கு ரூ.290 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பஸ் மற்றும் நான்கு சக்கர சிறிய ரக கண்டெய்னருக்கு ரூ.605 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல் ஆறு சக்கர கண்டெய்னருக்கு 660 ரூபாயும் 8 சக்கர கண்டெய்னருக்கு ரூ.1155 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது
தமிழகத்திலேயே அதிக கட்டணம் வசூல் செய்யும் சுங்கச்சாவடி என்ற பெருமையை மதுரை நத்தம் சாலை சுங்கச்சாவடி பெற்றிருக்கிறது. இதை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவ்வளவு கட்டணமா என்று வாயை பிளந்த வாகன ஓட்டிகள் மற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், நத்தம் சுங்கச்சாவடி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் இறங்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications