ஜெயலலிதா ஸ்டைலில் சசிகலா சொன்ன சிலந்தி கதை.. எடப்பாடி பழனிசாமி மீது மறைமுக அட்டாக்!
மதுரை: மதுரை உசிலம்பட்டியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிலந்தி கதை சொல்லி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார் வி.கே சசிகலா.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா முதல்வர் பதவியை நோக்கி காய்நகர்த்தி வந்தார். ஆனால் சசிகலாவால் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்தார் சசிகலா. அதற்குள் கட்சிக்குள் ஆட்டமே மாறியது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களாக பணியாற்ற்னர்.

சசிகலா விடுதலைக்குப் பின்னர் அதிமுகவில் பிரளயமே வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சசிகலா முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியால் கட்டங்கட்டப் பட்டார். அதிமுகவை கைப்பற்ற ஓபிஎஸ், சசிகலா தரப்பினர் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
அண்மையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் படங்கள் இல்லாததால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தார். இதனால் கட்சிக்குள் இருந்த புகைச்சல் வௌிவரத் துவங்கியது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஓபிஎஸ், டிடிவி.தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், சசிகலா ஒரு முக்கிய அஸ்திரத்தைக் கையில் எடுத்தார். ஜெயலலிதா பிறந்தநாளான இன்று உசிலம்பட்டியில் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் சசிகலா.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளையொட்டி, மதுரை உசிலம்பட்டி பிஎம்டி கல்லூரி அருகே ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய சசிகலா, மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதைத்தொடர்ந்து, பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.
சசிகலா பேசுகையில், "வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்த அதிமுகவாக போட்டியிட்டு மகத்தான வெற்றியை பெறுவோம்; அந்த இலக்கை நோக்கியே நமது பயணம்; இதைத்தான் கழகத் தொண்டர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்" எனக் கூறியுள்ளார்.

மேலும் பேசிய சசிகலா, "ஜெயலலிதா சொன்ன ஒரு கதை தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. பாவம் செய்த ஒருவன் நரகத்துக்கு போகிறான். நகரத்துக்கு போகும் பாதையில் ஒரு சிலந்திப் பூச்சியை மிதிக்காமல் காலை தூக்கி வைத்துச் சொல்கிறான். அந்த சின்ன புண்ணியத்துக்காக சொர்க்கத்தில் இருப்பர்கள் அந்த மனிதனுடன் பேசுகின்றனர்.
மேலே ஒரு சிலந்தி சொர்க்கத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. அதன் நூல் கீழே வரை தொங்குகிறது, அந்த நூலை பிடித்து நீ மேலே வா என்று சொல்கிறார்கள். உடனே அந்த மனிதர், நூலை பிடித்து மேல்நோக்கி ஏறுகிறார். அப்போது நரகத்தில் இருக்கும் மேலும் சிலரும் அந்த நூலை பிடித்து தொங்கிக்கொண்டு மேலே சென்று கொண்டிருக்கின்றனர்.
உடனே, அந்த நபர், நம்மை மட்டும் தானே கூப்பிட்டார்கள், கூட இவர்களும் ஏன் வருகிறார்கள் என உதைத்து தள்ளுகிறார். உடனே நூல் அறுந்து அவரும் சேர்ந்து விடுகிறார். நான் என்ன சொல்கிறேன் என்றால், யாராக இருந்தாலும் சுய வெறுப்பின்றி தன்னலம் கருதாமல் ஒற்றுமையாக செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். இதுவே மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய நன்மை.
தீயசக்தி திமுகவை விரட்டி, ஜெயலலிதா ஆட்சியைக் கொண்டு வருவதற்கு அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதை தொண்டர்களும் உணர்ந்துள்ளனர். தொண்டர்களின் எண்ணத்தை ஈடேற்றிடவும், தமிழக மக்களின் வாழ்வில் ஒளியேற்றிடவும், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications