மதுரை பள்ளி மாணவன் கடத்தல் வழக்கில் ட்விஸ்ட்.. ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா குஜராத்தில் தற்கொலை
மதுரை: மதுரையில் பள்ளி மாணவன் கடத்தல் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மனைவி குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பெண்ணின் தாயார் மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
மதுரை எஸ். எஸ். காலனி பகுதியைச் சேர்ந்தவர் மைதிலி. இவருக்கு சொந்தமாக வணிக வளாகம், வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. இவரது மகன் தனியார் பள்ளி ஒன்றில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவனை ஆட்டோ ஓட்டுநர் பால்பாண்டியோடு சேர்ந்து கத்தி முனையில் ஒரு கும்பல் திடீரென கடத்திச் சென்றது.

கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர வைத்தது. சிறுவனை கடத்தி சென்ற கும்பல், சிறுவனின் தாயாரை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தனர். 2 கோடி ரூபாய் கொடுத்தால் தான் உன் பையனை விடுவோம் என அவர்கள் மிரட்டல் விடுத்தனர். போலீசுக்கு போனால் உன் மகனை இனிமேல் பார்க்கவே முடியாது என மிரட்டினர். இது தொடர்பான ஆடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடத்தல் கும்பலுடன் மிரட்டலுக்கு அஞ்சாமல் துணிச்சலாக சிறுவனின் தாயார் மைதிலி போலீசை அணுகினார். எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கு சென்று தனது மகன் கடத்தப்பட்டதாகவும், அந்த கும்பல் போனில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்தார் மைதிலி. மைதிலி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
ஆய்வாளர் காசி தலைமையில் தனிப்படை அமைத்து சிறுவனை கடத்திச் சென்ற கும்பலை தேடினர். செல்போன் டவர் மூலமாக கடத்தல் கும்பலை காவல்துறையினர் கண்டுபிடித்து விரட்டிச் சென்றனர். போலீஸ் விரட்டுவது தெரிந்ததும் கடத்தல் கும்பல் சிறுவனை விட்டு விட்டு தப்பி ஓடியது. மூன்று மணி நேரத்தில் சிறுவனை போலீசார் மீட்டனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் மேலும் இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் குஜராத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணி செய்பவரின் மனைவி சூர்யா என்பவருக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
இது தொடர்பாக அவரை போலீசார் தேடி வந்த நிலையில், இன்று குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தின் பின்பக்கம் உள்ள தோட்டத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சூர்யாவின் தாயாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சூர்யாவின் தாயார் போலீசில் புகார் அளித்துள்ளார். மன உளைச்சல் காரணமாக சூர்யா தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications