போதை ஊசி போட்டு துன்புறுத்தும் செல்லப்பாண்டி.. போலீஸுக்கு போன புஷ்பராணி.. மதுரையில் பரபரப்பு
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த புஷ்பராணி என்பவருக்கு போதை ஊசி போட்டு தனது கணவன் டார்ச்சர் செய்வதாக திருமங்கலம் காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருமங்கலம் அண்ணாநகரைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி வயது (32). இவர் கம்பவுண்டர் ஆக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி புஷ்பராணி வயது (28) இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், செல்லப்பாண்டி கடந்த சில ஆண்டுகளாக போதை ஊசிக்கு அடிமையாகி உள்ளார்.

போதை ஊசி
இவரது நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் மூலம் போதை ஊசி செலுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தனது மனைவியை சித்திரவதை செய்தும், வரதட்சணையாக ரூபாய் 5 லட்சம் வரை கேட்டும் துன்புறுத்துவதாக மனைவி புஷ்பராணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

போதைக்கு அடிமை
போதை ஊசிக்கு அடிமையான தனது கணவனை போதை மயக்கத்தில் இருந்து காப்பாற்றவும் புஷ்பராணி முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி தனது மனைவிக்கு போதை ஊசியை செலுத்தி சித்திரவதை செய்ததாகவும், இதனால் அளவுக்கு அதிகமான போதை ஊசி செலுத்தியதால் அவரது உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளது.

போலீஸில் புகார்
இதுகுறித்து அவருடைய பெற்றோரிடம் புகார் அளித்துள்ளார். பெற்றோர்களின் அறிவுறுத்தலின்படி மனைவி புஷ்பராணி திருமங்கலம் காவல் துறையினரிடம் கணவன் மீது புகார் செய்துள்ளார்.

நண்பர்கள்
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகியுள்ள செல்லப்பாண்டியை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், செல்லப்பாண்டி போதை ஊசி வழங்கும் அவரது நண்பர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications