மும்பை வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.. தாக்கரே உடன் மீட்டிங்! அடுத்து "அவரை" சந்திக்கிறாராம்
மும்பை: மத்திய பாஜக அரசுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்கும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் இன்று மும்பை வந்து உத்தவ் தாக்ரே மற்றும் சரத் பவாரை சந்தித்தனர்.
நமது நாட்டில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக, ஏற்கனவே இரண்டு தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. இதனால் மீண்டும் ஒரு முறை வெல்ல வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

மறுபுறம் மோடியை வீழ்த்த பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் ஒரே அணியில் திரள வேண்டும் என்பதைப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பாஜகவுக்கு எதிர் நிலைப்பாட்டில் உள்ள பலரும் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.
பீகார் முதல்வர்: இந்தச் சூழலில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வியாழக்கிழமை மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோரை சந்தித்து பேசியுள்ளனர். முதலில் தாக்கரே இல்லத்திற்குச் சென்று உத்தவ் தாக்கரேவை சந்தித்த அவர்கள், அதைத் தொடர்ந்து சரத் பவாரையும் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்
2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைக்க ஐக்கிய ஜனதா தளம் (யுனைடெட்) தலைவர் நிதிஷ்குமார் தொடர்ந்து பல எதிர்க்கட்சி தலைவர்களைச் சந்தித்து வரும் நிலையில், இப்போது மும்பையில் இரு மூத்த அரசியல்வாதிகளை அவர் சந்தித்துள்ளார்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை அவர் புவனேஸ்வரில் ஒடிசா பிரதமர் நவீன் பட்நாயக்கை சந்தித்திருந்தார். நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் பாந்த்ராவின் புறநகர் பகுதியில் உள்ள உத்தவ் தாக்கரேவின் தனிப்பட்ட இல்லமான மாடோஸ்ரீயில் மதிய உணவு உண்டனர்.
இந்தச் சந்திப்பிற்குப் பின் கூட்டாக நிதீஷ் குமாரும் தேஜஸ்வி யாதவும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஜனநாயகத்தைக் காப்பாற்ற மும்பை வந்துள்ளதாகத் தெரிவித்த அவர்கள், சிவசேனாவில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் எடுத்த முடிவைச் சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தனர்.
அதேபோல சிவசேனாவின் உத்தவ் தாக்கரே பேசுகையில், "நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் நான் ராஜினாமா செய்தது ரொம்பவே தவறு.. ஷிண்டே ஆதரவாளர்கள் எனது கட்சிக்கும், எனது தந்தையின் பாரம்பரியத்திற்கும் துரோகம் இழைத்துவிட்டனர். நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது சட்டப்படி தவறாக இருக்கலாம், ஆனால் தார்மீக அடிப்படையில் சரி என்பதாலேயே அதைச் செய்தேன்" என்றார்.
அடுத்து சரத் பவார்: அதைத் தொடர்ந்து தெற்கு மும்பையில் அமைந்துள்ள சரத் பவார் இல்லத்திற்கும் நேரில் சென்று இருவரும் அவரை சந்தித்தனர். இந்த சந்திப்புகள் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சுமார் ஓராண்டு மட்டுமே இருக்கும் நிலையில், தேசியளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி வரும் காலத்தில் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து கட்சிகளும் அடுத்தாண்டு நடக்கும் மக்களவை தேர்தலுக்குள் ஒரே அணியில் திரளும் என இவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications