3 டாக்டர்கள், 26 நர்சுகளுக்கும் பரவிய கொரோனா.. ஸ்தம்பித்த மருத்துவமனை.. மும்பையில் கொடுமை
மும்பை: மும்பையில் உள்ள வொக்கார்ட் மருத்துவமனை, கட்டுப்பாட்டு மண்டலமாக, மும்பை மாநகராட்சியால் (பி.எம்.சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், கடந்த ஒரு வாரத்தில், 26 செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதுதான்.
பாதிக்கப்பட்ட டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர்ச்சியாக இரண்டு முறை பரிசோதனை செய்து, நெகட்டிவ் ரிசல்ட் வரும்வரை, மருத்துவமனைக்கு நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா பாதித்தால், அது வேறு பல நோயாளிகளுக்கும் எளிதாக பரவும் வாய்ப்பு இருந்திருக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவத் துறை
"இவ்வளவு அதிக நோயாளிகள் மருத்துவ துறையிலிருந்து வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்" என்று கூடுதல் மாநகராட்சி ஆணையர் சுரேஷ் கக்கானி கூறியுள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. விசாரணைக்கு நிர்வாக சுகாதார அதிகாரி தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை
பாதிக்கப்பட்ட செவிலியர்கள் வைல் பார்லேயில் உள்ள தங்களது தங்கும்விடுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட இரண்டு மருத்துவர்கள் செவன்ஹில்ஸிலும், ஒருவர் எஸ்.எல்.ரஹேஜா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 270 க்கும் மேற்பட்ட மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சில நோயாளிகளின் ஸ்வாப் மாதிரிகள் சோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கேண்டீன்
அதேநேரம், மருத்துவமனையின் கேண்டீன் செயல்பட்டு வருகிறது, ஊழியர்களுக்கும் நோயாளிகளுக்கும் உணவை வழங்கும், ஆனால், கேண்டினில் மக்கள் இயக்கங்களை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு அதிகாரி மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அக்ரிபாடா காவல் நிலைய மூத்த இன்ஸ்பெக்டர் சவலராம் அகவானே தெரிவித்துள்ளார்.

சேவைகள் இல்லை
வொக்கார்டு மருத்துவமனையில் மட்டும் 30 பாசிட்டிவ் கேஸ்கள் பதிவாகியுள்ளன, இது பல நகர வார்டுகளை விட அதிகமாக உள்ளது மற்றும் டேட்டாக்களின், குறிப்பிட்ட மருத்துவமனையின், ஜி-சவுத் மற்றும் டி வார்டுகளில் மட்டுமே 30 க்கும் மேற்பட்டோருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. "எங்கள் OPD மற்றும் அவசர சேவைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் புதிய சேர்க்கை இருக்காது" என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

முதியவரிடமிருந்து பரவியது
70 வயதான மாரடைப்பு நோயாளிக்கு கொரோனா நோய்த்தொற்று இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அவர் மார்ச் 27 அன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது உறுதியானது. இதன்பிறகு அவருக்கு சிகிச்சையளித்த இரண்டு செவிலியர்களும் பாதிப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் பல செவிலியர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

உபகரணங்கள் இல்லை
பாதிக்கப்பட்ட செவிலியர்களின் உடன் பணியாற்றும் பிற நர்சுகள், மற்றும் அறை தோழர், தோழிகளை தனிமைப்படுத்த மருத்துவமனை நிர்வாகம் தவறியதால் தொற்று வேகமாக பரவியதாக மருத்துவமனை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா நோயாளிக்கு சிகிச்சையளித்த நர்சுகள் மற்றும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்கப்படவில்லை. அறிகுறிகள் தோன்றும் வரை அவர்கள் பணியிலும் நீடித்துள்ளனர் என்பது குற்றச்சாட்டு. ஐக்கிய செவிலியர் சங்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இருப்பினும், வொக்கார்ட் மருத்துவமனை குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.












Click it and Unblock the Notifications