அஜித் பவார் இறந்தது தெரியாமல்.. பண்ணை வீட்டில் தாய் செய்த செயல்.. கண் கலங்க வைத்த சம்பவம்
மும்பை: மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் நேற்று முன்தினம் விமான விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்த விபத்து நடந்தபோது அஜித் பவாரின் தாயாரா ஆஷா பவார் தனது பண்ணை வீட்டில் இருந்துள்ளார். அப்போது திடீரென்று அவர் தனது மகனுக்கு ஏதோ நடந்துள்ளது என அங்கிருந்த ஊழியர்களிடம் கூறி டிவியில் அஜித் பவாரை பார்க்க வேண்டும் என்று கூறி அழுதுள்ளார். மேலும் அஜித் பவார் மரணத்தை மறைக்க ஊழியர்கள் வீட்டி்ல் இருந்த டிவியின் கேபிள் வயர் இணைப்பை துண்டித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் துணை முதல்வராக இருந்தவர் அஜித் பவார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். இவர் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சரத் பவாரின் அண்ணன் மகன் ஆவார். இந்நிலையில் தான் நேற்று முன்தினம் காலையில் பாராமதி விமான நிலையத்தில் அவரது தனி விமானம் தரையிறங்கியபோது விபத்தில் சிக்கியது.
இதில் அஜித் பவார் மரணடைந்தார். அஜித் பவாருடன் சென்ற அவரது பாதுகாவலர், உதவியாளர், 2 பைலட்டுகளான சுமித் கபூர் மற்றும் ஷாம்பவி பதக் ஆகியோரும் பலியாகினர். நேற்றைய தினம் அஜித் பவார் உடல் தகனம் செய்யப்பட்டது.
மனைவி - 2 மகன்கள்
அஜித் பவாருக்கு வயது 66. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மனைவி பெயர் சுனேத்ரா பவார். இவர் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். அஜித் பவார் விபத்தில் சிக்கியபோது சுனேத்ரா பவார் டெல்லியில் இருந்தார். விபத்து பற்றி அறிந்தவுடன் அவர் பாராமதிக்கு திரும்பினார். இந்த விபத்து நடந்தது பற்றிஅஜித் பவாரின் தாய் ஆஷா பவாருக்கு தெரியாது.
ஏதோ தப்பா இருக்கு - கணித்த தாய்
ஆனால் விபத்து நடந்த சமயத்தில் பண்ணை வீட்டில் இருந்த ஆஷா பவார் ஏதோ தவறு நடந்துவிட்டது. என் மகனுக்கு ஏதோ நடந்துவிட்டது. அவனை நான் பார்க்க வேண்டும். உடனே டிவியை ஆன் செய்து தாருங்கள் என்று ஊழியர்களிடம் கூறியுள்ளார். ஆனால் அஜித் பவார் விபத்தில் சிக்கி இறந்ததை டிவியில் பார்ப்பதை ஊழியர்கள் விரும்பவில்லை. இதனால் ஊழியர்கள் அவரை சமாதானம் செய்தார்.
விபத்தில் சிக்கினானா? தாய் கேட்ட கேள்வி
அஜித் பவார் சாருக்கு எதுவும் ஆகவில்லை. என்று கூறியுள்ளார். ஆனால் ஆஷா பவார் நம்பவில்லை. என் மகன் ஏதாவது விபத்தில் சிக்கினானா? என்று கேட்டுள்ளார். இதை கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அஜித் பவார் மரணமடைந்த செய்தியை அவரிடம் மறைக்க ஊழியர்கள் வீட்டில் உள்ள டிவியின் கேபிள் வயர் இணைப்பை துண்டித்தனர். அதுமட்டுமின்றி அவரது செல்போனை ‛பிளைட் மோடில்' போட்டுள்ளனர்.
பண்ணை வீட்டில் வெளியேற முயற்சி
அஜித் பவாருக்கு எதுவும் நடக்கவில்லை என்று கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், ஆஷா பவார் தன் மகனுக்கு ஏதோ ஒரு சிறிய காயம் ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்து தொடர்ந்து மகனைப் பார்க்க வேண்டும் என்று கூறி வந்ததோடு, ஒரு கட்டத்தில் அழுது கொண்டு பண்ணை வீட்டில் இருந்து வெளியேற முயன்றார். இதையடுத்து ஊழியர்கள் அவரை சமாதானப்படுத்தி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
மேனேஜர் சொன்ன தகவல்
இதுபற்றி பண்ணை வீட்டின் மேனேஜர் சம்பத் தைகுடே கூறுகையில், ‛‛ஆஷா அம்மாவிடம் எதுவும் நடக்கவில்லை என்று நாங்கள் மீண்டும் மீண்டும் சொன்னோம். ஆனால் அவர் தனது மகனை உடனே பார்க்க வேண்டும் என்று பண்ணை வீட்டில் இருந்து வெளியேற முயன்றார். அவர் யாருடைய பேச்சையும் கேட்கவில்லை. இறுதியில் வேறு வழியின்றி பாராமதியில் உள்ள அஜித் பவாரின் பங்களாவிற்கு அழைத்து சென்றோம்'' என்றார்.
4 நாட்களுக்கு முன்பு சந்திப்பு
அஜித் பவார் விபத்தில் சிக்குவதற்கு 4 நாட்களுக்கு முன்பு தனது தாய் ஆஷா பவாரை சந்தித்து பேசினார். சுமார் 15 நிமிடங்கள் வரை இருவரும் பேசி கொண்டிருந்தனர். அதன்பிறகு அஜித் பவார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதன்பிறகு 4 நாட்கள் கழித்து மும்பையில் இருந்து பாராமதிக்கு விமானத்தில் புறப்பட்டபோதுவிபத்தில் சிக்கி மரணடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications