பாகிஸ்தான் தான் முக்கியமா? துருக்கிக்கு ஆப்பிள் வியாபாரிகள் அடித்த ‛ஆப்பு’.. அசத்துறாங்களே! செம மூவ்
மும்பை: நம்நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலில் துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து துருக்கிக்கு சுற்றுலா செல்வதை நம் நாட்டு மக்கள் தவிர்க்க தொடங்கி உள்ளனர். இப்படியான சூழலில் தான் ஆப்பிள் வியாபாரிகள் இணைந்து துருக்கிக்கு ஆப்பு வைத்துள்ளனர்.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் என்பது வலுத்தது. பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. ஏவுகணைகள் ஏவி 9 பயங்கரவாதிகள் முகாம்கள், 3 விமானப்படை தளங்களை நம் படைகள் அழித்தன.

இதையடுத்து பாகிஸ்தான் அலறியடித்து கொண்டு போர் நிறுத்தத்துக்கு வந்தது. நம் நாடு சம்மதம் தெரிவித்ததால் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இருப்பினும் இந்த மோதலில் 3 நாடுகள் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. அந்த நாடுகள் என்னவென்றால் சீனா, துருக்கி, அஜர்பைஜான்.

இந்த 3 நாடுகளுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நெருக்கமான பந்தம் நீண்டகாலமாக உள்ளது. சீனா பஹல்காம் தாக்குதலை கண்டித்தாலும் கூட இந்தியாவிடம் அடிவாங்கிய பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. அதேவேளையில் துருக்கி, அஜர்பைஜான் நாடுகள் இரண்டும் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பயங்கரவாத முகாம்களை அழித்த நம் நடவடிக்கையை கண்டித்தது. அப்பாவிகள் யாரும் இறக்காத நிலையிலும் அப்பாவிகளை கொன்றதாக பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது இந்த துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள்.

இதனால் நம் நாட்டு மக்கள் துருக்கி, அஜர்பைஜான் மீது கடும் கோபமடைந்துள்ளனர். இருநாடுகளும் சுற்றுலா துறைக்கு பெயர் பெற்றவை. நம் நாட்டில் இருந்து ஆண்டுக்கு 3 லட்சம் பேர் வரை துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்கின்றனர். இருநாடுகளும் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் அங்கு சுற்றுலா செல்வதை இப்போது நம் நாட்டு மக்கள் நிறுத்த தொடங்கி உள்ளனர். பல சுற்றுலா சேவை நிறுவனங்களும் துருக்கி, அஜர்பைஜான் சுற்றுலாவை ரத்து செய்துள்ளன. அதுமட்டுமின்றி துருக்கி, அஜர்பைஜானுக்கு சுற்றுலா செல்வதை நிறுத்தும்படி சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆகி வருகின்றன.
இது ஒருபுறம் இருக்க நம் நாட்டின் ஆப்பிள் வியாபாரிகள் துருக்கிக்கு செக் வைத்துள்ளனர். அதாவது புனே ஏபிஎம்சி மார்க்கெட் ஆப்பிள் வியாபாரிகள் துருக்கியிடம் இருந்து ஆப்பிள் வாங்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக சுயோக் ஜிண்டி என்ற ஆப்பிள் வியாபாரி கூறுகையில், ‛‛மேலும் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது நம் நாடு தான் முதல் ஆளாக உதவி செய்தது. ஆனால் துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறது. துருக்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் துருக்கியிடம் இருந்து ஆப்பிள் வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம். அதற்கு பதிலாக நம் நாட்டின் இமாச்சல பிரதேசம் மற்றும் பிற பகுதிகளில் இருந்து ஆப்பிள் வாங்கி விற்பனை செய்ய உள்ளோம்.

நம் நாடு பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. ஆனால் துருக்கி, பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை வழங்கி வருகிறது. இதனை உணர்ந்து வாடிக்கையாளர்கள் கூட துருக்கி ஆப்பிள்களை வாங்க விரும்புவது இல்லை. இதனால் நாங்களும் துருக்கி ஆப்பிளை வாங்காமல் புறக்கணிக்க உள்ளோம். புனே ஏபிஎம்சி மார்க்கெட்டை பொறுத்தவரை 3 மாதங்கள் வரை துருக்கி ஆப்பிள் விற்பனை செய்யப்படும். மொத்தம் ரூ.1200 முதல் ரூ.1500 கோடிக்கு ஆப்பிள் விற்பனையாகும். இனி துருக்கி ஆப்பிளை வாங்க மாட்டோம்'' என்று தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications