அணையை உடைத்தது நண்டு தானே.. நண்டை கைது செய்யுங்கள்... காங். பிரமுகர் போலீசில் புகார்
மும்பை: நண்டை கைது செய்யக்கோரி காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் காவல்நிலையத்திற்கு நண்டை எடுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகராஷ்டிராவின் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள சிப்லுன் தாலுகாவில் திவாரே அணை உள்ளது. 20 லட்சம் கியூபிக் மீட்டர் கொள்ளளவை கொண்ட இந்த அணை கட்டப்பட்டு 14 ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. சிப்லுன் தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. சதானந்த் சவானுக்கு சொந்தமான 'கெம்டெக்' என்ற நிறுவனம் தான் இந்த அணையை கட்டியது.
கடந்த நவம்பர் மாதமே இந்த அணையில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக உள்ளூர் மக்கள், அதிகாரிகளிடம் முறையிட்டதால், அதிகாரிகளும் அணையை பார்வையிட்டு சில மராமத்து பணிகளை மேற்கொண்டனர். பின்னர், அணை உறுதியாக இருப்பதாக மக்களிடம், அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, அணை உடைந்தது. இதுவரை, 19 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சிலரை தேடும் பணி நடந்து வருகிறது. 10 க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
அணை இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்து அம்மாநிலத்தின் நீர்வளத்துறை அமைச்சரான சிவசேனா கட்சியின் தனாஜி சாவந்த் (Tanaji Sawant) விளக்கமளித்தார். அப்போது, திவாரே அணையில் அதிக எண்ணிக்கையில் நண்டுகள் இருந்ததே இந்த உடைப்பு காரணம் என்றும், அணை உடைப்புக்கு முந்தைய நாளில் மட்டும், கனமழையால் அணையின் நீர் மட்டம் 8 மீட்டருக்கு மேல் உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தினால், ஆத்திரமடைந்த காங்கிரஸ் இளைஞரணி தலைவர், நண்டுகளை காவல்நிலையத்திற்கு எடுத்துச்சென்று, இவற்றால் தான் அணை உடைந்துவிட்டது என அமைச்சர் நினைத்தால், கொலை செய்த குற்றத்திற்காக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நண்டுகளை கைது செய்து தண்டனை வழங்கவேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டார்.