விதிமுறைகளை மீறி ரூ.388 கோடி வருவாய் ஈட்டிய வழக்கிலிருந்து, அதானியை விடுவித்தது நீதிமன்றம்!
மும்பை: வர்த்தக விதிமுறைகளை மீறி அதன் மூலம் ரூ.388 கோடி வருவாய் ஈட்டியதாக அதானி மீதும், ராஜேஷ் அதானி மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
ஏறத்தாழ 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.

அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் மார்க்கெட் விதிமுறைகளை மீறி வர்த்தகம் செய்து அதன் மூலம் ரூ.388 கோடியை ஈட்டியதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து 2012ம் ஆண்டு தீவிர மோசடிகளை விசாரிக்கும் அலுவலகமான SFIO அதானி மீதும், நிறுவனத்தின் இயக்குநரான ராஜேஷ் அதானி மீதும் வழக்கு பதிவு செய்திருந்தது. குற்றச்சதி, ஏமாற்றுதல் போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு 2014ம் ஆண்டு இருவரும் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டிருப்பதாக கூறி, மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இவர்களை விடுவித்தது. ஆனால் வழக்கு இத்துடன் நின்றுவிடவில்லை. செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு சென்றது. 2019ல் தீர்ப்பளித்த செஷன்ஸ் நீதிமன்றம், இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சரியானவை என்று கூறி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்திருந்தது.
ஆனால் அதானியும், ராஜேஷ் அதானியும் செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், செஷன்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற நீதிபதி R.N. லத்தா தற்போது உத்தரவிட்டுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டதாவோ, ஏமாற்றியதாக அதானி நிறுவனத்தின் மீது எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.
உயர்நீதிமன்ற உத்தரவு பற்றிய முழு விவரமும் பின்னர் வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலம் 12 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த வழக்கின் விசாரணைகள், உத்தரவுகள், இடைக்கால உத்தரவு, நீதிபதியின் அறிவுறுத்தல், அரசு தரப்பு வாதம், அதானி தரப்பு வாதம் என அனைத்தும் பல கோணங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இவை அனைத்தும் சந்தை ஒழுங்குமுறைகள் மீறல் மற்றும் நிறுவன நிதி மோசடி தொடர்பாக நடந்த முக்கியமான வழக்குகளில் ஒன்றாக இதை மாற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications