தாம்பத்தியம்.. 54 வயது கணவருக்கு ஆண்மை பரிசோதனை கேட்ட மனைவி.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மும்பை: திருமணம் முடிந்த 17 நாளில் கணவனை பிரிந்து சென்ற மனைவி, தனது கணவர் தாம்பத்தியத்திற்கு தகுதி இல்லாதவர் என்றும். ஆண்மை குறைவு இருப்பதால் தனக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரியும் வழக்கு தொடர்ந்தார். ஆனால் 54 வயது கணவருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட முடியாது என்று அவரது மனைவியின் கோரிக்கையை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் மனைவியின் கோரிக்கையை நிராகரித்தது ஏன் என்று பார்ப்போம்.
மகாராஷ்டிரா மாநிலம் சத்தாராவை சேர்ந்த பெண் ஒருவருக்கு 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. ஆனால் திருமணம் முடிந்த 17 நாளில் அந்த பெண், கணவரை பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் அக்டோபர் மாதம் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது கணவருக்கு ஆண்மை குறைவு இருப்பதால் தனக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தனது கணவருக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றம் ஆண்மை பரிசோதனை நடத்த உத்தரவிட்டது. அதன் பேரில் புனே சசூன் மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் பெண்ணின் கணவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தினர். அதன் அறிக்கையை சத்தாரா மாவட்ட குடும்ப நல கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அதில் பெண்ணின் கணவர் பாலியல் உறவு கொள்ள தகுதியில்லாதவர் என கூறமுடியாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கை மீது திருப்தி அடையாத பெண், கணவருக்கு ஆண்மை சோதனை அடங்கிய முழு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். 2024 பிப்ரவரியில் கோர்ட்டு பெண்ணின் கணவருக்கு முழு உடல் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கி இருந்தது.
இதை எதிர்த்து பெண்ணின் கணவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையின் போது பெண்ணின் கணவர் தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரருக்கு சசூன் மாநகராட்சி மருத்துவமனையில் ஏற்கனவே ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. எனவே மீண்டும் சோதனை நடத்த தேவையில்லை என்றும், மனுதாரருக்கு தற்போது 54 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக அவரது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம்" என்றார்.
இதேபோல பெண்ணுமே தனது தரப்பு வாதங்களை முன் வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜாம்தார் பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். நீதிபதி தனது உத்தரவில், "திருமணத்தின் போது கணவருக்கு 47 வயதும், பெண்ணுக்கு 40 வயதும் ஆகியிருந்தது. தற்போது அவர்களுக்கு முறையே 54, 47 வயதாகிறது. வயதாகும் போது பாலியல் நடவடிக்கைகள், பாலியல் ஆர்வம் குறைவது நன்றாக தெரிந்த ஒன்று தான். எனவே இந்த வழக்கில் திருமணத்துக்கு பிறகு 8 ஆண்டுகளை கடந்து மீண்டும் ஒரு மருத்துவ சோதனைக்கு உத்தரவிடுவது பயனற்றது" என்று கூறி மனைவியின் கோரிக்கையை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications