ஆஹா! "இது" மட்டும் நடந்தால் காங்கிரசுக்கு பெரிய நிம்மதி.. ஆனா கடைசியில் மெகா ட்விஸ்ட் ஒன்னு இருக்கே
மும்பை: லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் காங்கிரஸ் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் இன்று தொகுதிப் பங்கீடு இறுதியாகும் எனத் தெரிகிறது.
லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் கட்சி தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது.

சமீபத்தில் தான் சமாஜ்வாதி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்திருந்தது. இதையடுத்து இப்போது காங்கிரஸின் அடுத்த பார்வை மகாராஷ்டிரா பக்கம் திரும்பியுள்ளது.
மகாராஷ்டிரா: லோக்சபாவுக்கு 48 எம்பிக்களை அனுப்பும் மகாராஷ்டிரா ரொம்பவே முக்கியமான மாநிலமாகப் பார்க்கப்படுகிறது. அங்கே சிவசேனா (தாக்கரே)- என்சிபி (சரத் பவார்)- காங்கிரஸ் கூட்டணி தேர்தலைச் சந்திக்கும். இதில் பெரும்பாலான தொகுதிகளில் உடன்பாடு ஏற்பட்ட போதிலும், எட்டு இடங்கள் உடன்பாடு ஏற்படாததால் இழுபறி ஏற்பட்டுள்ளது.
அதாவது மும்பையில் மொத்தம் 6 லோக்சபா தொகுதிகள் இருக்கும் சூழலில் அங்கே தெற்கு மத்திய மும்பை, வடக்கு மத்திய மும்பை, வடமேற்கு மும்பை தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது. மறுபுறம் மகாராஷ்டிராவில் 18 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட விரும்பும் உத்தவ் தாக்கரே கட்சி, மும்பையில் மும்பை தெற்கு, வடமேற்கு மும்பை, வடகிழக்கு மும்பை மற்றும் தெற்கு மும்பை என 4 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.
இன்று இறுதியாகும்: அதேபோல சரத் பவார் தலைமையிலான என்சிபி கேட்கும் சில தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட விரும்புவதாகத் தெரிகிறது. இதுவே அங்கே குழப்பத்திற்குக் காரணம். அங்கே 40 தொகுதிகளில் முன்னரே உடன்பாடு ஏற்பட்ட போதிலும் இன்னும் 8 தொகுதிகளில் உடன்பாடு ஏற்படாமல் குழப்பம் நிலவுகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூட நேரடியாகத் தலையிட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரே நேரடியாக உத்தவ் தாக்ரே மற்றும் சரத் பவார் உடன் தொலைப்பேசி மூலம் பேசினார்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் தான் காங்கிரஸின் இரண்டு முக்கிய தலைவர்களான முன்னாள் முதல்வர் அசோக் சவான் மற்றும் மிலிந்த் தியோரா பாஜகவில் ஐக்கியமாகினர். இது காங்கிரஸ் கட்சியின் சீட் பேச்சுவார்த்தையைச் சிக்கலாக்கியுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாஜக பக்கம் தாவிய பிறகே உத்தவ் தாக்கரே கட்சி, மும்பையில் அதிக இடங்கள் தேவை என உறுதியாகக் கேட்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது.
இருக்கே பெரிய சிக்கல்: இந்தச் சூழலில் தான் இன்று இந்தக் கூட்டணி தங்கள் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் எனத் தெரிகிறது. எதிர்பார்த்தபடி இன்று மகாராஷ்டிராவில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டால் அது காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கு மிகப் பெரிய ஒரு உத்வேகத்தைத் தரும். அதேநேரம் இந்த கூட்டணிக்கு மற்றொரு சிக்கலும் இருக்கிறது.
அதாவது ஷிண்டே சிவசேனாவையும், அஜித் பவாரின் என்சிபி பிரிவையும் தான் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதனால் தாக்ரே தரப்பிற்கும், சரத் பவார் தரப்பிற்கும் வேறு புதிய சின்னங்களே ஒதுக்கப்படும். தேர்தலுக்குக் கொஞ்சக் காலமே இருக்கும் நிலையில், இந்த சின்னங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு மிகப் பெரிய சிக்கலாக இருக்கும்.












Click it and Unblock the Notifications