"ஒரே இருமல்.. பெட் கொடுங்க.. இல்லாட்டி என் அப்பாவை கொன்னுடுங்க".. கதறும் மகன்.. கலங்கடிக்கும் வீடியோ
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகமாகி உள்ளது
மும்பை: "என் அப்பா இருமிட்டே இருக்கார்.. எங்கெங்கோ அலைந்து திரிந்து இங்கே வந்தோம். இப்போ அவருக்கு ஒரு படுக்கைகூட இல்லை.. ஒன்னு அவருக்கு படுக்கை குடுங்க, இல்லாட்டி ஊசியை போட்டு கொன்னுடுங்க, அவரை இப்படியே வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியாது" என்று பெற்ற மகன் டாக்டர்களிடம் கதறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.. இப்படி ஒரு சோகத்திலும், கலக்கத்திலும், கவ்வி கிடக்கிறது மகாராஷ்டிரா மாநிலம்.. காரணம் விஸ்வரூபமெடுத்து மிரட்டி வரும் கொரோனா தொற்று..!
சென்ற வருடம் போலவே, இந்த முறையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தொற்று அதிகம் ஏற்பட்டுள்ளது.. இந்த 2வது அலை மிக கொடுமையானது என்கிறார்கள்.. மிக தீவிரமாகவும் பரவக்கூடியது என்று எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள்..
அதனால்தான், இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த அங்கு இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அப்படி இருந்தாலும், அந்த மாநிலத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறது.
தடுப்பூசி
தினமும் இவர்களின் எண்ணிக்கை 50,000-க்கும் அதிகமாகவே இருந்துவருகிறது... இதைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளும் போதுமான பயனை தரவில்லை.. அத்துடன், தடுப்பூசியும் போதுமான அளவுக்கு கையில் இல்லை.. அதனால், தடுப்பூசி போடுவதும் 2 நாட்களுக்கு அங்கு நிறுத்தி வைக்கப்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இது எல்லாவற்றிற்கும் மேலாக, கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரியில் போதிய படுக்கை வசதி இல்லாமல் இருந்துவருகிறது... இதனால் மாநில அரசு கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
ஆஸ்பத்திரி
இதில் பல நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.. அந்த வகையில், ஒரு வயதானவரின் நிலைமை பரிதாபத்தை வரவழைத்துள்ளது.. இவருக்கு தொற்று பாதிப்பு கடுமையாக ஏற்பட்டுள்ளது.. எனவே, மும்பையில் இருந்து 850 கி.மீ தொலைவில் உள்ள சந்திரபூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை தருவதற்காக இவரது மகன் இவரை அழைத்து வந்துள்ளார்.. ஆனால், ஆஸ்பத்திரி மூடப்பட்டிருந்தது.. இதனால், நாள் முழுவதும், அந்த வயதானவரை ஆஸ்பத்திரிகளுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் பக்கத்திலேயே உட்கார வைக்கும் நிலைமை ஏற்பட்டது.
படுக்கை
இதுகுறித்து அந்த முதியவரின் மகன் சொல்லும்போது, "நான் நேத்து மதியானம் 3 மணியில் இருந்து அப்பாவை அழைத்து கொண்டு சுற்றி வருகிறேன்.. மாறி மாறி ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக சென்றேன்.. எங்குமே படுக்கை வசதி இல்லை.. அதனால், ராத்திரியெல்லாம் அப்பாவை கூட்டிக் கொண்டு பயணம் செய்து, தெலுங்கானா சென்றோம்.. இதற்கே விடிகாலை 3 மணி ஆகிவிட்டது..
இருமல்
பிறகு மறுபடியும், அப்பாவை மகாராஷ்டிராவுக்கு அழைத்து வந்தோம். மீண்டும் இடம் கிடைக்காமல் மருத்துவமனை வாசலில் காத்திருக்கிறோம். ஆம்புலன்ஸிலுள்ள ஆக்ஸிஜன் முடியப் போகிறது. நீங்கள், எனது அப்பாவுக்கு பெட் கொடுங்கள் அல்லது நீங்களே ஒரே ஒரு ஊசி போட்டு கொன்றுவிடுங்கள்.. இப்படியே அவரை வீட்டுக்கு அழைத்து செல்ல முடியாது" என்று கதறி அழுகிறார் சந்திரபுரியை சேர்ந்த அந்த இளைஞர்.
24 घंटे चक्कर लगाए, कहीं बेड नहीं!
— Puja Bharadwaj (@Pbndtv) April 14, 2021
बुज़ुर्ग मरीज़ के बेटे की गुहार, ‘या बेड दो या इंजेक्शन देकर मार दो!’
महाराष्ट्र के चंद्रपुर का हाल. pic.twitter.com/ZzxhlnzdZL
பற்றாக்குறை
இப்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் பல இடர்பாடுகள் சூழ்ந்துள்ளன.. நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஆக்ஸிஜன், இப்படி பல சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.. ஆக்ஸிஜன் மற்றும் மருந்து பற்றாக்குறையை சமாளிக்க முதல்வரின் உத்தவ் தாக்கரே ஏற்கனவே ராணுவத்தின் உதவியைக் கேட்டுள்ளார் என்ற போதிலும், நோயாளிகளின் மிக மோசமான சூழல் அம்மாநிலத்தை நிலைகுலைய வைத்து வருகிறது.