மும்பை உட்பட.. பல நகரங்களிலும் தீயாக பரவும் கொரோனா.. மீண்டும் லாக்டவுனை நோக்கி மகாராஷ்டிரா?
மும்பை: மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு மீண்டும் கிடுகிடுவென அதிகரித்தபடி இருக்கிறது. மீண்டும் ஒரு லாக்டவுன் போடும் நிலைமை வந்துவிடும் என்று மாநகராட்சி மேயர் எச்சரிக்கும் அளவுக்கு அங்கு நிலைமை மோசமாகிவிட்டது
கடந்த வாரத்தின் ஒவ்வொரு நாளும், மகாராஷ்டிராவில் 3,000 க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் புதிய கேஸ்கள் 14 சதவீதம் அதிகரித்தன. இந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (பிப்ரவரி 14) முடிவடைந்த வாரத்தில், மாநிலம் முழுவதும் 20,207 புதிய கேஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. முந்தைய வாரத்தில் (பிப்ரவரி 1-7) இது 17,672 ஆக இருந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் (ஜனவரி 25-31), மாநிலத்தில் 17,293 கேஸ்கள் பதிவாகின.

மும்பை, புனே, நாக்பூர்
மும்பை, புனே, அவற்றின் சுற்றியுள்ள பகுதிகளும் விதர்பா பிராந்தியமும் அதிக அளவு கேஸ்களை பதிவு செய்துள்ளது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் கொரோனாவில் கிட்டத்தட்ட 60 சதவீதம் புனே, மும்பை, நாக்பூர், தானே மற்றும் அமராவதி ஆகிய பகுதிகளில் பதிவாகியுள்ளன. 3,228 கேஸ்கள் (பிப்ரவரி 8-14), புனே நகரில் பதிவாகின. மும்பை (2,195 கேஸ்கள்) நாக்பூர் (2,628 கேஸ்கள்), அமராவதி (2,420 கேஸ்கள்) பதிவு செய்தன. அந்த வாரத்தில் தானே நகரில் 1,960 கேஸ்கள் பதிவாகியுள்ளன.

மேயர் ரயில் பயணம்
இந்த நிலையில்தான் லோக்கல் ரயிலில் மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர், இன்று பயணம் செய்து மக்கள் எந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள் என்பதை நேரில் ஆய்வு செய்தார்.

முகக் கவசம்
முக கவசம் அணியாத பயணிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தயவுசெய்து முகக் கவசம் அணியுங்கள் என்று வலியுறுத்தினார். இதே போல ரயில் நிலையங்களில் உள்ள உணவு நிலையங்களை நடத்திவருவோரிடம் சென்று அவர்களும் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து உள்ளார்களா என்பதை ஆய்வு செய்தார்.

மீண்டும் லாக்டவுன்
சமூக இடைவெளி மற்றும் கையை அடிக்கடி கழுவுவது போன்ற பழக்கத்தை விடக்கூடாது என்று அவர் பயணிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனிடையே முதல்வர் உத்தவ் தாக்கரே அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்றுவது உறுதிசெய்ய உத்தரவு பிறப்பித்தார். மேலும் கொரோனா தொடர்பான விதிமுறைகளை சரியாக பின்பற்றாவிட்டால் மீண்டும் மாநிலம் முழுக்க லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.












Click it and Unblock the Notifications