முடிவுக்கு வந்தது இழுபறி.. மகாராஷ்டிரா முதல்வராகிறார் தேவேந்திர பட்னாவிஸ்.. தேதி குறித்த பாஜக!
மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் இன்னும் புதிய அரசு பதவியேற்கவில்லை. தொடர்ந்து மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார் என்பதில் சஸ்பெண்ஸ் நீடித்து வந்த நிலையில் இந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தான் மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகராஷ்டிராவில் ஆளும் மகாயுதி கூட்டணி அபார வெற்றி பெற்றது. பாஜக, சிவசேனா (ஷிண்டே), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய மகாயுதி கூட்டணி 233 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், பாஜக மட்டும் 132 இடங்களில் வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகள் ஒருவாரம் ஆன போதும் கூட அங்கு இன்னும் புதிய அரசு பதவியேற்கவில்லை.

இதற்கு முதல்வர் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததே காரணமாக இருந்தது. ஏக்நாத் ஷிண்டேவும் முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மறுத்ததால், பாஜகவுக்கு இந்த விவகாரத்தில் பெரும் தலைவலியே ஏற்பட்டது. பாஜகவும் முதல்வர் பதவியை தங்கள் கட்சியை சேர்ந்த ஒருவருக்கே கொடுக்க வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தது. இதனால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துக்கொண்டே இருந்தது.
இதற்கு மத்தியில் முதல்வர் விவகாரம் மற்றும் கூட்டணி கட்சிகள் இடையேயான அதிகார பகிர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கடந்த வியாழக்கிழமை ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), தேவேந்திர பட்னாவிஸ் (பாஜக), அஜித்பவார் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் டெல்லி விரைந்தனர். அவர்கள் அன்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினர்.
இதில் முதல்வர் பதவியை பாஜகவுக்கு வழங்க முடிவு செய்ததாக கூறப்பட்டது. இதை ஏக்நாத் ஷிண்டே ஏற்றுக்கொண்டாலும், அமைச்சரவையில் முக்கிய இலாக்காக்களை கேட்டதால் இழுபறி நீடித்தது. மகாராஷ்டிரா திரும்பிய பிறகு பேச்சுவார்த்தையில் பங்கேற்காமல் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊருக்கு சென்றார். இதனால், மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு இடையே, வரும் 5 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்கும் என்று பாஜக நேற்று அறிவித்தது. இத்தகைய பரபரப்புக்கு நடுவே, பாஜக எடுக்கும் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக ஏக்நாத் ஷிண்டே இன்று காலை கூறினார். இதனால், மகாராஷ்டிராவில் ஒருவாரத்திற்கும் மேலாக நீடித்து வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது.
அதேவேளையில், தேவேந்திர பட்னாவிசுக்கே மீண்டும் முதல்வர் பதவி வழங்கப்படுமா அல்லது முரளிதர் மோஹோல் நியமிக்கப்படுவாரா? என்ற பேச்சு அடிபட்டது. இந்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ்தான் முதல்வராகப்போகிறார் என்றும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் கூட்டம் நாளை அல்லது நாளை மறுநாள் நடைபெறும் எனவும் அதில் சட்டமன்றக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் பாஜக மூத்ததலைவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications