"ஓபிசி+ எஸ்சி+ விவசாயிகள்.." பாஜகவின் மிஷன் மகாராஷ்டிரா! மொத்தம் 150+ முடிவுகளுக்கு கிரீன் சிக்னல்
மும்பை: மகாராஷ்டிராவில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குக் கடந்த சில வாரங்களில் சுமார் 150+ முடிவுகளுக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்றைய தினம் கூட ஓபிசி சமூகத்தினரைக் கவரும் வகையில் மகாராஷ்டிர அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், இவை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் இப்போது ஷிண்டே தலைமையிலான பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி கூட்டணி ஆட்சி இருக்கிறது. அங்கு அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம்: தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அம்மாநில அமைச்சரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகக் கடந்த சில வாரங்களில் பல முறை அம்மாநில அமைச்சரவை கூடியுள்ள நிலையில், சுமார் 150+ முடிவுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இது தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக நேற்றைய தினமும் அமைச்சரவையில் ஓபிசி சமூகத்தினரைக் கவரும் வகையில் மகாராஷ்டிர அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
ஓபிசி: அதாவது இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு கிரீமி லேயர் நடைமுறை பின்பற்றப்படும். அதாவது ஓபிசி பிரிவில் இட ஒதுக்கீட்டுப் பலனைப் பெற குடும்பத்தின் ஆண்டு வருமானம் குறிப்பிட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும் இதை கீரிமி லேயர் எனக் குறிப்பிடுவார்கள். இந்த குறிப்பிட்ட தொகைக்குக் கீழ் ஒருவருக்கு ஆண்டு வருமானம் வந்தால் அதை நான் கீரிமி லேயர் என்பார்கள். அவர்களுக்கு வழக்கம் போல இட ஒதுக்கீடு பலன்கள் கிடைக்கும். அதேநேரம் இந்த ஆண்டு வருமானத்தைத் தாண்டினால் அவர்கள் கீரிமி லேயராக கருதப்பட்டு அவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படாது.
அதே ஓபிசி சமூகத்தில் பொருளாதார ரீதியாக முன்னேறாத பிரிவினருக்கு வாய்ப்பு தரவே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது. இதற்கிடையே ஓபிசி ஆண்டு வருமான உச்சவரம்பு இப்போது ரூ.8 லட்சமாக இருக்கும் நிலையில், அதை ரூ.15 லட்சமாக உயர்த்த மகாராஷ்டிர அமைச்சரவை பரிந்துரை அளித்துள்ளது. இருப்பினும், இதை முடிவு செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் இருக்கிறது. எனவே, மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்தால் மட்டமே உச்சவரம்பை உயர்த்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்சி பிரிவினர்: மேலும், மகாராஷ்டிர மாநில அட்டவணை சாதி ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அவசரச் சட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டம் அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் 27 பதவிகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அங்குக் கடந்த 3 வாரங்களில் நடக்கும் 4வது அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த அமைச்சரவை கூட்டங்களில் 40க்கும் மேற்பட்ட முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சிறிய சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன் சார்ந்தே இந்தக் கூட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு தவிரவும் தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்காகப் போரிவலி அரசு நிலத்தை வழங்க அனுமதி, பாந்த்ரா அரசு காலனியில் வசிக்கும் ஊழியர்களுக்கு வீடு, ஜல்னா- நாந்தேட் விரைவுச்சாலை என்று பல்வேறு திட்டங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள்: முன்னதாக கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் சோயாபீன் மற்றும் பருத்தி விவசாயிகளைக் கவரும் வகையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதேபோல அரசு உதவி திட்டங்களைப் பெற விவசாயிகளின் உச்சவரம்பும் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 150 முடிவுகள்: கடந்த மாதம் இறுதியில் மகாராஷ்டிர அமைச்சரவை இரண்டு முறை கூடியது. அதில் ஒரு கூட்டத்தில் 35 முடிவுகளுக்கும், மற்றொரு கூட்டத்தில் 36 முடிவுகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டது. அதேபோல கடந்த வாரம் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாளில் 40 முடிவுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டன. கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் பெரும்பாலும் உள்கட்டமைப்பு ரீதியான முடிவுகளுக்கு ஒப்புதல்கள் தரப்பட்டன.
இந்தச் சூழலில் தான் இப்போது ஓபிசி பிரிவினரைக் குறிவைத்துப் பல முடிவுகளுக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. இப்படிக் கடந்த ஒரு சில வாரங்களில் மட்டும் மகாராஷ்டிர அமைச்சரவை 150+ திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அங்கு அடுத்த மாதம் நடக்கும் தேர்தலில் இது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே எதிர்பார்க்ப்படுகிறது.












Click it and Unblock the Notifications