மகாராஷ்டிராவில் அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் உடல் கருகி பலி
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரில் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரில் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் 17 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் இந்த மருத்துவமனையின் ஐசியு வார்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

10 பேர் பலி
இந்த தீ விபத்தில் உடல் கருகியும் மூச்சுத்திணறியும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஐசியு வார்டில் 15க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் உடனடியாக அருகிலுள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போஸ்லே தெரிவித்தார்.

என்ன காரணம்
கரும் புகையால் எரிந்த இந்த தீயைத் தீயணைப்புத் துறையினர் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், மின்கசிவு காரணமாகத் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தீ விபத்து முழுமையாக தற்போது கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடிவடிக்கைள் குறித்து ஆராய்ந்து வருவதாக ஆட்சியர் ராஜேந்திர போஸ்லே குறிப்பிட்டார்.

வீடியோ
இந்த தீ விபத்து தொடர்பாக இணையத்தில் பல வீடியோக்கள் பரவி வருகிறது. அப்படிப் பரவும் ஒரு வீடியோவில் கரும் புகையால் சூழப்பட்ட மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் அவசர அவசரமாக வெளியே அழைத்து வரப்படுகின்றனர். மேலும், மற்றொரு வீடியோவில் புகையை அதிகம் சுவாசித்தவர்களை, மருத்துவர்கள் காப்பாற்ற முயலும் நெஞ்சை உலுக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

ரூ 5 லட்சம் நிவாரணம்
இந்த விபத்து குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக், இந்த ஐசியு கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் புதிதாக ஏற்படுத்தப்பட்டது என்றும் புதிய கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது தீவிரமான பிரச்சினை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தீ விபத்தைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

தேவேந்திர ஃபட்னாவிஸ் சாடல்
மகாராஷ்டிர முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "அகமத்நகரில் இருந்து மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் கவலையளிக்கும் செய்தி. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். இதில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!" என்று ட்வீட் செய்தார்.












Click it and Unblock the Notifications