கர்நாடக தேர்தலில் மோடி சொன்ன அந்த கோஷத்திற்காகதான் கடவுள் தண்டனை கொடுத்தார்- உத்தவ் தாக்ரே
மும்பை: சிவசேனா கட்சி இரண்டாக பிளவுபட பாஜகவே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. உத்தவ் தாக்கரேவும் இதே விமர்சனத்தை முன்வைத்து வரும் நிலையில், பாஜக தனது வாக்குறுதிப்படி நடந்திருந்தால் இன்று ஏற்பட்டு இருக்கும் நெருக்கடி வந்து இருக்காது என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், கூட்டணியை உடைத்த உத்தவ் தாக்கரே தனது கட்சிக்கு நேர் எதிர் கொள்கை கொண்ட காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தார்.

இரண்டரை ஆண்டுகள் இந்த கூட்டணி ஆட்சி நீடித்த நிலையில், சிவசேனா கட்சி 2 ஆக பிளவு பட்டது. இதனால் பெரும்பான்மை இழந்த உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40-க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து, பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே ஆட்சி அமைத்தார். தற்போது கட்சியும் ஏக்நாத் ஷிண்டே வசம் வந்துவிட்டது. ஓராண்டுக்கு மேலாக இந்த கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டது.
அஜித் அவர் தலைமையில் 36 எம்எல்ஏக்கள் பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தனர் அமைச்சரவையிலும் அஜித் பவார் இடம் பெற்றார். தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என இரு அணிகளும் மோதி வருகின்றன. மகாராஷ்டிரா அரசியல் குழப்பத்திற்கு பாஜகவே காரணம் என்று எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் சரத் பவார் பெயரும் இடம் பெற்றதால் அவரை பலவீனப்படுத்தும் நோக்கில் அமலாக்க துறையை காட்டி அஜித் பவாரை தங்கள் வசம் எடுத்ததாக எதிர்க்கட்சிகள் கூட்டாக குற்றம் சாட்டி வருகின்றன.
இதற்கிடையே சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். ஏற்கனவே கட்சி இரண்டாக உடைந்ததால் பாஜக மீது கடும் கோபத்தில் இருக்கும் உத்தவ் தாக்கரே சமயம் கிடைக்கும் போதெல்லாம் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பாஜகவை குப்பை கட்சி என்றும், பாஜக சொன்னபடி நடந்திருந்தால் இவ்ளோ பிரச்சினை வந்திருக்குமா என்றும் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக விதர்பா மண்டலத்தில் தொண்டர்களை சந்தித்து வரும் உத்தவ் தாக்கரே யவத் மாலில் கூட்டத்தில் பேசியதாவது:- நாங்கள் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதே ஆதரிக்கிறோம். ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பாஜகவின் ஒரே நாடு ஒரே கட்சி என்று திட்டத்தை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். பிரதமர் மோடியின் செல்வாக்கு தற்போது சரிந்து விட்டது. இதற்கு சமீபத்தில் கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக அடைந்த படு தோல்வியே இதற்கு சான்றாகும்.
பிரதமர் மோடி கர்நாடகாவில் பஜ்ரங்பலி கி ஜெய் என முழக்கமிட்டார். கடவுள் அவருக்கு பதிலடி கொடுத்துவிட்டார். பாஜகவுக்கு தாக்கரே இல்லாத சிவசேனா தான் வேண்டும். தற்போது பாஜக குப்பை கட்சியாக மாறிவிட்டது. இவ்வாறு அவர் பேசினார். மேலும் அவர் கூறுகையில், "கடந்த 2019-ம் ஆண்டு மகாராஷ்டிர சட்டசபை தேர்தலுக்கு முன்பு அமித்ஷா அவர்கள் மும்பை வந்திருந்தார்கள். அப்போது பாஜக சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் முதல்வர் பதவியை தலா இரண்டறை ஆண்டுகள் பகிர்ந்து கொள்வது என முடிவு எடுத்தோம்.
ஆனால் தேர்தலுக்கு பின் அவர்கள் அதை மறந்துவிட்டனர். அதை அப்படியே கடைப்பிடித்திருந்தால் தற்போது பாஜக வேறு கட்சிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க தேவையிருந்திருக்காது. நான் மந்திராலயாவுக்கு கூட சென்றது கிடையாது என்று என்னை பாஜக கூறுவதற்கு தகுதியில்லை. அடுத்தவர்களை குறை கூறுவதை முதலில் பாஜக நிறுத்தவேண்டும். அதற்கு பாஜவுக்கு தகுதியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications