பேரே சும்மா அதிருது.. அடுத்து ரெடியாகும் ‘இந்தியா’ கூட்டணி லோகோ! மும்பை கூட்டத்தின் அஜெண்டா இதான்
மும்பை: இன்று தொடங்கும் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் 2 நாள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள விசயங்கள் என்ன? எடுக்கப்படப்போகும் முடிவுகள் என்னவென்று பார்ப்போம்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில் குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் உருவான கூட்டணி 'இந்தியா'. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஜேடியு, ஆம் ஆத்மி, ஆர்ஜேடி, என்சிபி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சமாஜ்வாடி, முஸ்லிம் லீக், தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா, ஆகிய கட்சிகள் வேற்றுமைகளை மறந்து ஒரே அணியாக கூட்டணி அமைத்து உள்ளனர்.

பீகார் தலைநகர் பாட்னாவில் இதற்கான முதல் கூட்டம் நடைபெற்றது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் 2 வது கூட்டம் நடைபெற்றது. அதில்தான் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் மூன்றாவது கூட்டம் இன்று மும்பையில் கூடுகிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மும்பைக்கு சென்றடைந்தனர். ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரும் பீகார் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவும் மும்பை சென்று உள்ளார். பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார் மும்பை புறப்பட்டு உள்ளார்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்படப்போகும் முக்கிய முடிவுகள் மற்றும் அறிவிப்புகள் பற்றிய தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்தியா கூட்டணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் நிதீஷ் குமார் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அதே சமயம் தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அவர் சார்ந்த கட்சியினர் குரல் எழுப்ப வாய்ப்புகள் இருப்பதால், அதற்கு பதிலாக பல்வேறு கட்சிகளை சேர்ந்த துணைக் குழுக்களிடம் அந்த பொறுப்பை வழங்கலாம் என்பது பல தலைவர்களின் விருப்பமாக உள்ளது.
இது அல்லாமல் இந்த மும்பை கூட்டத்தில் இந்தியா கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டம் மற்றும் முத்திரை குறித்தும் மூன்றாவது எதிர்க்கட்சிகள் முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. மற்றொரு தகவலோ முத்திரை தயாராகிவிட்டது என்றும், இன்று அல்லது நாளை அதை தலைவர்கள் வெளியிடுவார்கள் எனவும் கூறுகிறது.
மும்பை கிராண்ட் ஹயாத் நட்சத்திர விடுதியில் நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் 28 எதிர்க்கட்சிகளை சேர்ந்த 63 பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். ஆனால், இந்த கூட்டத்திலும் பிரதமர் வேட்பாளர் தொடர்பாக ஆலோசிக்கப்படாது என்றும், கருத்து வேறுபாடுகளை களைத்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை வடிவமைத்த பின்னர் அதுபற்றி அடுத்தடுத்த கூட்டங்களில் முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று தொகுதி பங்கீடு குறித்தும் இறுதிகட்டத்தில்தான் முடிவு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக 2024 லோக் சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக வியூகங்களை வகுப்பது பற்றிதான், தேர்தலுக்கு இடைப்பட்ட காலத்தில் மத்திய பாஜக அரசை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது பற்றியும் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் விவாதிக்க உள்ளார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications