கொரோனா.. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சிவாஜி ராவ் பாட்டீல் மரணம்
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜிராவ் பாட்டீல் நிலங்கேகர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று புனேவில் காலமானார். அவருக்கு வயது 89. இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த சிவாஜிராவ் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர் சிகிச்சையை அடுத்து குணமடைந்த சிவாஜிராவ் வீடு திரும்பினார். இந்த நிலையில் மீண்டும் கிட்னி பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவாஜிராவ் இன்று காலாமானார்.

மகாராஷ்டிராவில் மூத்த காங்கிரஸ் தலைவரான சிவாஜிராவ் மரத்வாடாவில் லத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். அந்த மாநிலத்தில் 1985 - 1986 வரை முதல்வராக இருந்தார். இவர் மீது மோசடி குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. 1985ஆம் ஆண்டில் எம்டி தேர்வு எழுதி இருந்த இவரது மகள் மற்றும் நண்பர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற்று தேர்வாகும் வகையில் மோசடி செய்ய உதவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மும்பை ஹைகோர்ட்டும் அப்போது கடுமையான விதிகளை இவருக்கு எதிராக விதித்து இருந்தது.
இவரது இறுதிக்கட்ட சடங்குகள் லாத்தூரில் இருக்கும் நிலங்கா நகரில் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது மகன் சாம்பாஜி பாட்டீல் பாஜகவில் இருக்கிறார். மகாராஷ்டிராவில் கடந்த தேவேந்திர பட்னவிஸ் ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications