உத்தவ் தாக்கரே கூட ஓகே.. இவர்தான் பிரச்சனை.. தலைவலியாக மாறிய சஞ்சய் ராவத்.. பாஜக யோசனை!
மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த தலைவர் ராஜ்ய சபா எம்பி சஞ்சய் ராவத் பாஜகவிற்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறார்.
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா மூத்த தலைவர் ராஜ்ய சபா எம்பி சஞ்சய் ராவத் பாஜகவிற்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறார்.
மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. அங்கு சிவசேனா முதல்வர் பதவி வேண்டும் என்று கேட்டு வருகிறது.
இதனால் மகாராஷ்டிராவில் கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாத நிலையில் இருக்கிறது பாஜக கட்சி. இதன் காரணமாக பாஜக சிவசேனா இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது.
நேரம் முடிந்துவிட்டது.. பட்னாவிஸ் உடனே பதவி விலக வேண்டும்.. சஞ்சய் ராவத் விடாப்பிடி.. ஏன் இப்படி?
யார் எதிர்ப்பு
மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைப்பதை தொடர்ந்து கடுமையாக எதிர்த்து வரும் நபர் என்றால் அது சிவசேனாவின் மூத்த தலைவர் ராஜ்ய சபா எம்பி சஞ்சய் ராவத்தான். பாஜக ஆட்சி அமைப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் அதில் பாதி வருடம் நாங்களும் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று சஞ்சய் ராவத் தொடர்ந்து கூறி வருகிறார்.
வழி நடத்துகிறார்
அதேபோல் இவர்தான் சிவசேனா எம்எல்ஏக்களை வழி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. உத்தவ் தாக்கரே மொத்தமாக அனைத்து பொறுப்புகளையும் சஞ்சய் ராவத்திடம் ஒப்படைத்துவிட்டார். பாஜகவுடன் பேசுவது தொடங்கி, சிவசேனா எம்எல்ஏக்களை கட்டுக்குள் வைப்பது, மீடியாவை எதிர்கொள்வது வரை அனைத்து பணிகளையும் சஞ்சய் ராவத்தான் செய்து வருகிறார்.
பிரச்சனை
முதலில் உத்தவ் தாக்கரேவும், ஆதித்யா தாக்கரேவும்தான் பிரச்சனையாக இருப்பார்கள். மற்ற சிவசேனா எம்எல்ஏக்களை, தலைவர்களை சமாளித்துவிடலாம் என்று பாஜக நினைத்தது. ஆனால் பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில் தற்போது சஞ்சய் ராவத் பாஜகவிற்கு தலைவலியாக மாறி இருக்கிறார்.
நேரடி பகை
சிவசேனாவில் பல வருடங்களாக இருக்கும் சஞ்சய் ராவத், உத்தவ் தாக்கரேவின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான தலைவர். அவர்களுக்கு மிகவும் விசுவாசமான நபராக சஞ்சய் ராவத் இருந்து வருகிறார். அதனால் சஞ்சய் ராவத்தை பாஜகவால் பெரிய அளவில் நேரடியாக பகைத்துக் கொள்ள முடியவில்லை.
வழக்கு நிலுவை
சஞ்சய் ராவத்திற்கு எதிராக எந்த வழக்கும் நிலுவையில் இல்லை. அதனால் அவரை அப்படி லாக் செய்யவும் முடியாது. ஆகவே இதனால் சஞ்சய் ராவத்திற்கு எதிராக அரசியல் ரீதியாக வேறு ஏதாவது வகையில் காய் நகர்த்த முடியுமா என்று பாஜக பார்த்து வருகிறது.