பிரதமர் மோடி பிரச்சாரத்தை புறக்கணித்த அஜித் பவார்? பாஜக கூட்டணியில் குழப்பம்! காங்கிரஸ் செம ஹேப்பி
மும்பை: மகாராஷ்டிராவில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், அங்குப் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தையே என்சிபி தலைவர்கள் அஜித் பவார், நவாப் மாலிக் உள்ளிட்டோர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது அங்குப் பேசுபொருள் ஆகியுள்ளது.
இப்போது மகாராஷ்டிராவில் ஷிண்டே முதல்வராக இருக்கும் நிலையில், பாஜக- ஷிண்டே சிவசேனா- அஜித் பவார் என்சிபி ஆகிய கட்சிகள் ஆட்சியில் உள்ளது.

அங்கு அடுத்த வாரம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் உள்ள பாஜகவின் மஹாயுதி கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
புறக்கணிப்பு: அதாவது நேற்று வியாழக்கிழமை மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட பல என்சிபி மூத்த தலைவர்கள் பங்கேற்கவில்லை. ஆளும் பாஜக கூட்டணியில் அஜித் பவாரின் என்சிபி முக்கிய கட்சியாக இருக்கும் சூழலில் பிரதமர் மோடியின் பிரச்சார கூட்டத்தையே என்சிபி கட்சியினர் புறக்கணித்தது பேசுபொருள் ஆகியுள்ளது.
அஜித் பவார் மட்டுமின்றி என்சிபி வேட்பாளர்களான சனா மாலிக், நவாப் மாலிக் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகியோரும் மோடியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஏற்கனவே பாஜக கூட்டணியில் பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் இடையே மோதல் இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அஜிக் பவார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்காதது பேசுபொருள் ஆகியுள்ளது.
குழப்பம் இல்லை: அதேநேரம் தங்களுக்குக் கருத்து வேறுபாடு இருந்தாலும் மோதல் எதுவும் இல்லை என்றே பாஜக கூட்டணி தலைவர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக ஷிண்டே சிவசேனா எம்பி மிலிந்த் தியோரா கூறுகையில்,"மகாயுதி கூட்டணி ஒன்றுபட்டு இருக்கிறது. முழு பலத்துடன் தேர்தலில் போட்டியிடுகிறது. எதிர்க்கட்சி கூட்டணி தான் பலவீனமாக இருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகு உங்களுக்குத் தெரியும்" என்றார்.
மகாராஷ்டிர தேர்தலில் பாஜக இந்துத்துவ பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறது. இந்துக்களே ஒன்றுபடுங்கள் என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்து வருகிறது. அதேநேரம் இதில் அஜித் பவாருக்கு துளியும் இஷ்டம் இல்லையாம். மகாராஷ்டிராவில் பாஜக அரசு செய்துள்ள வளர்ச்சி பணிகளை முன்வைத்தே பிரச்சாரம் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
என்ன காரணம்: ஏனென்றால் அங்கு என்சிபி கட்சியினருக்கு பொதுவாகவே இஸ்லாமியர்கள் வாக்குகள் அதிகம் இருக்கும்.. கடந்த லோக்சபா தேர்தலிலேயே இஸ்லாமிய வாக்குகள் அஜித் பவார் தரப்பிற்கு வராததாலேயே அங்கு அவர்களால் வெல்ல முடியவில்லை. இதே நிலை சட்டசபைத் தேர்தலிலும் தொடர்ந்தால் வெல்ல முடியாது என்பதாலேயே வளர்ச்சியை முன்வைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என அஜித் பவார் கூறியிருக்கிறார். இந்த விவகாரத்திலேயே இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் வெற்றி எளிதாக இருக்கும் என்பதால் காங்கிரஸ் கூட்டணி மகிழ்ச்சியில் உள்ளது. மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அங்கு மொத்தம் 288 இடங்கள் இருக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவ. 20ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து நவ, 23ம் தேதி அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜக கூட்டணிக்கு எதிராகக் காங்கிரஸ்- தாக்ரே சிவசேனா- சரத் பவார் என்சிபி களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications