கேர்ள் ஃப்ரெண்டுடன் உல்லாச டூர்! மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட்டை கிழித்த நபர்! இப்போ கம்பி எண்ணுகிறார்
மும்பை: மகாராஷ்டிராவில் மனைவியிடம் இருந்து தப்பிக்க இளைஞர் ஒருவர் செய்த செயல் அவரை கம்பி எண்ண வைத்துள்ளது.
கொரோனா பாதிப்பு இப்போது தான் குறைந்துள்ள நிலையில், உலகின் அனைத்து நாடுகளும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கள் எல்லையைத் திறந்து வருகிறது.
குறிப்பாக, சுற்றுலாவை மட்டும் பிரத்தியேகமாக நம்பி இருந்த நாடுகள் பல சலுகைகள் அறிவித்து வெளிநாட்டுப் பயணிகளை அழைக்கிறது.

உலக நாடுகள்
கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இப்போது வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல ஆகும் செலவும் வெகுவாக குறைந்து உள்ளதால் பலரும் தங்களுக்குப் பிடித்த நாடுகளுக்குச் சென்று வருகின்றனர். அப்படி தான் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் மாலத்தீவுக்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ளார். ஆனால், இப்போது அவர் கம்பி எண்ணி வருகிறார். அப்படி என்ன செய்தார் என்பதைப் பார்க்கலாம்.

மும்பை ஏர்போர்ட்
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 32 வயது நபர் ஒருவர் தனது வெளிநாட்டுக்குப் பயணத்தை மனைவியிடம் இருந்து மறைப்பதற்காக பாஸ்போர்ட்டில் இருந்து சில பக்கங்களைக் கிழித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது தனது திருமணத்திற்கு மீறிய உறவை மூடிமறைக்க விரும்பிய அவர், இதற்காக அவர் பாஸ்போர்ட்டை கிழித்து உள்ளார். இதைக் கண்டுபிடித்து மும்பை ஏர்போர்ட்டில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா இளைஞர்
மும்பை சேர்ந்த அந்த நபர் இளம் பெண் ஒருவர் உடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். தனது கேர்ள் பிரெண்ட் உடன் வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா செல்ல திட்டமிட்ட அவர், இதற்காக டிக்கெட் எல்லாம் பக்காவாக புக் செய்துள்ளார். பின்னர், தனது மனைவியிடம் அலுவல் ரீதியான பணிக்காக இந்தியாவில் வேறு மாநிலத்திற்குச் செல்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பி உள்ளார்.

இன்ப சுற்றுலா
அந்த நபர் மாலத்தீவில் தனது காதலி உடன் உல்லாசமாகப் பொழுதைக் கழித்துள்ளார். இருப்பினும், அவரது மனைவிக்குச் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாகப் பல முறை அவருக்குக் கால் செய்துள்ளார். இருப்பினும், இந்த நபர் காலை எடுக்கவில்லை. இன்ப சுற்றுலா முடிந்ததும், கடந்த வியாழக்கிழமை இரவு விமானம் மூலம் மும்பை வந்து இறங்கி உள்ளார்.

மாட்டிக் கொண்ட ரோமியோ
மனைவிக்குச் சந்தேகம் வந்துவிட்டதை உணர்ந்த அந்த நபர், காதலி உடன் இன்ப சுற்றுலா சென்றதை மறைக்க வேண்டும் என்பதற்காக விமானத்தில் இருந்து இறங்கும் முன்னரே பாஸ்போர்ட்டில் இருந்து மாலத்தீவு சென்றதற்கான பக்கத்தைக் கிழித்துள்ளார். இதனை மும்பை விமான நிலையத்தில் உள்ள குடியேற்ற அதிகாரிகள் கவனித்துள்ளனர். இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

கைது
மனைவியிடம் இருந்து தப்பிக்கவே தனது பாஸ்போர்ட்டில் இருந்து சில பக்கிகளைக் கிழித்தாக அவர் தெரிவித்தார். மேலும், பாஸ்போர்ட்டில் இருந்து பக்ககங்களைக் கிழிப்பது குற்றம் என்பது தனக்குத் தெரியாது என்றும் அவர் கூறி இருக்கிறார். இதையடுத்து இந்தியத் தண்டனைச் சட்டத்தில் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications