ரூ.500 கோடியை அள்ளி கொடுத்த டாடா! யார் அந்த மோகினி மோகன்? உயிலிலிருந்த பெயரால் குழம்பிய நெட்டிசன்கள்
மும்பை: மறைந்த ரத்தன் டாடாவின் உயில் தொடர்பான சில கூடுதல் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் பலருக்கும் தெரியாத மோகினி மோகன் தத்தா என்ற நபருக்கு ரத்தன் டாடா ரூ.500 கோடி சொத்தை எழுதி வைத்திருக்கிறார். யார் இந்த மோகினி மோகன் தத்தா.. இவருக்காக ரத்தன் டாடா ரூ.500 கோடியை அள்ளி கொடுக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் வாழ்ந்த மிக முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா. சர்வதேச அளவில் டாடா குழுமத்தை எடுத்துச் சென்றதில் ரத்தன் டாடாவின் பங்கு மிக முக்கியமானது.

ரத்தன் டாடா:
கடந்த சில ஆண்டுகளாகவே வயது மூப்பு பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த ரத்தன் டாடா, பொது நிகழ்ச்சிகளில் இருந்து சற்று விலகியே இருந்தார். இந்தச் சூழலில் தான் கடந்த அக்டோபர் மாதம் ரத்தன் டாடாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு இந்தியா மட்டுமின்றி சர்வதேச நாடுகளின் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ரத்தன் டாடா மறைவைத் தொடர்ந்து நோயல் டாடா டாடா டிரஸ்ட் தலைவரானார். இதற்கிடையே மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உயில் தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரூ.500 கோடி சொத்து:
அதாவது ரத்தன் டாடா தனது சொத்தில் (residual assets) மூன்றில் ஒரு பகுதியை மர்ம நபருக்காக விட்டுச் சென்றுள்ளார். அதாவது சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மோகினி மோகன் தத்தா என்பவருக்கு டாடா எழுதி வைத்துள்ளதாக தி எகானமி டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சொத்து இப்போதே மோகினி மோகனுக்கு சென்றுவிடாது. உயில் என்பதால் உயர் நீதிமன்றத்தின் சோதனைக்குப் பின்னரே சொத்து அவரது பெயருக்குச் செல்லும். இதற்குக் குறைந்தது ஆறு மாதங்கள் வரை ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.
யார் இந்த மோகினி மோகன் தத்தா:
மோகினி மோகன் தத்தா, ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். அவர் ஸ்டாலியன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். கடந்த 2013ம் ஆண்டு ஸ்டாலியன் நிறுவனம் டாடா சர்வீசஸின் ஒரு பகுதியாக மாறியது. இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைவதற்கு முன்பு ஸ்டாலியன் நிறுவனத்தில் 80% பங்குகளை மோகினி மோகன் வைத்திருந்தார். மீதமுள்ள 20% டாடா இண்டஸ்ட்ரீஸ் வசம் இருந்தது..
மோகினி மோகன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜாம்ஷெட்பூரில் உள்ள டீலர்கள் விடுதியில் தான் ரத்தன் டாடாவை சந்தித்தார். அப்போது மோகினி மோகனுக்கு வெறும் 24 வயது மட்டுமே ஆகியிருந்தது. அப்போது தொடங்கிய நட்பு கடைசி வரை தொடர்ந்துள்ளது.
டாடா உடனான நட்பு:
உயில் செய்தி வருவதற்கு முன்பு வரை மோகினி மோகன் குறித்து யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், உண்மையில் பல காலமாகவே டாடாவுடன் தொழிலதிபர் மோகினி மோகன் நெருக்கமான உறவையே கொண்டிருந்தார். இருவருக்கும் இடையேயான நட்பு 60 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு டாடாவின் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் நெருக்கமானவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்த விழாவில், மோகினி மோகனும் பங்கேற்று இருந்தார். அந்தளவுக்கு டாடாவுடன் நெருக்கமான உறவை மோகினி மோகன் கொண்டிருந்தார்.
மோகினி மோகன் தத்தாவின் மகளும் பல ஆண்டுகளாகவே டாடா நிறுவனத்தில் தான் வேலை செய்து வருகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு வரை அவர் தாஜ் ஹோட்டல்களில் பணிபுரிந்து வந்த சூழலில், அதன் பிறகு டாடா டிரஸ்ட்ஸில் பணிபுரிந்தார்.












Click it and Unblock the Notifications