மோடி பதவி விலகல்? நாக்பூர் ஆர்எஸ்எஸ். அலுவலகத்தில் புதிய பிரதமர் குறித்து ரகசிய ஆலோசனை- சஞ்சய் ராவத்
மும்பை: 75 வயது நிறைவடையும் பிரதமர் நரேந்திர மோடியை மாற்றிவிட்டு புதிய பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் ரகசிய ஆலோசனை நடைபெற்றதாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்பி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடி தமது பதவியில் இருந்து விலகுவதாக முடிவு செய்து ஓய்வு பெற விருப்பம் தெரிவிக்கவே நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு நேற்று சென்றதாகவும் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
பாஜகவில் 75 வயது நிறைவடைந்துவிட்டால் எந்த ஒரு பதவியிலும் இருக்க அனுமதிக்கப்படுவதில்லை என்பது நடைமுறை. பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான அத்வானி தொடங்கி எடியூரப்பா வரைக்கும் இதனைத்தான் பாஜக தற்போது வரை கடைபிடித்து வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த ஆண்டு 75 வயது நிறைவடைகிறது. இதனால் பிரதமர் பதவியில் மோடி தொடர்ந்து நீடிப்பாரா? என்கிற விவாதம் அவ்வப்போது எழுகிறது. லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்த விவகாரத்தை எழுப்பினார். இதனால் அதிர்ந்து போன பாஜக, பிரதமர் மோடிதான் 5 ஆண்டுகாலத்துக்குப் பிரதமர் என அறிவித்தது.
இந்த பின்னணியில் இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத் எம்பி பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார். மும்பையில் சஞ்சய் ராவத் இன்று அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்துக்கு சென்றார். பிரதமர் மோடி, தாம் பதவியில் இருந்து விலகும் ஓய்வு முடிவை ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களிடம் தெரிவிக்கவே பிரதமர் மோடி அங்கு சென்றார்.
இதனைத் தொடர்ந்து பிரதமராக உள்ள நரேந்திர மோடியின் ஓய்வுக்குப் பின்னர் புதிய பிரதமராக யாரை தேர்வு செய்வது என்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ரகசிய ஆலோசனை நடத்தினர். பிரதமராக உள்ள மோடிக்குப் பின்னர் நாட்டின் புதிய பிரதமராக மகாராஷ்டிராவை மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வாறு சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார். அவரது இந்த பேட்டி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் சஞ்சய் ராவத்தின் இந்த கருத்தை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியே
2029-ம் ஆண்டுவரை அப்பதவியில் நீடிப்பார்; பிரதமர் மோடியை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது என உறுதியாக தெரிவித்துள்ளார் தேவேந்திர பட்னாவிஸ்.












Click it and Unblock the Notifications