மும்பையில் ஸீரோ ஆய்வு...கொரோனா பரவல்...குடிசையில் 57%... அடுக்குமாடி குடியிருப்பில் 16%!!
மும்பை: மும்பையில் மேற்கொள்ளப்பட்ட ஸீரோ ஆய்வில் குடிசைப் பகுதியைச் சேர்ந்த 57% சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ஹவுசிங் சொசைட்டியைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் 16% பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிகமாக கொரோனா தொற்று உள்ளது. அறிகுறியே இல்லாமல்தான் பலருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
செம்பூர், மாதுங்கா, தஹிசர் ஆகிய இடங்களில் இருக்கும் குடிசைப் பகுதி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் மும்பை மாநகராட்சி ஸீரோ ஆய்வு மேற்கொண்டது. இந்த மாதத்தின் துவக்கத்தில் 14 நாட்கள், 6,936 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கொரோனா தொற்று வந்தவர்களிடம் 14 நாட்கள் கழித்து அவர்களது உடம்பில் IgG எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி எந்தளவிற்கு இருக்கிறது என்பதை கண்டறிய இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
அதிஉச்சபட்சம்-ஆந்திராவில் ஒரே நாளில் 7,948 பேருக்கு கொரோனா- இந்தியாவில் 15 லட்சத்தை கடந்தது பாதிப்பு
தாராவி குடிசைப் பகுதி
செம்பூர் மிகவும் நெருக்கடியான பகுதி. இங்கு சமூக விலகல் என்பது சாத்தியம் இல்லாதது. அதேபோல், தாராவி பகுதியும் நெருக்கடியான குடிசைப் பகுதி. இங்கும் சமூக இடைவெளி, தனிமனித இடைவெளி சாத்தியம் இல்லாதது. குடிசைப் பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்துவது. ஒரே இடத்தில் தண்ணீர் எடுப்பது போன்ற பல்வேறு காரணங்களால் தொற்று அதிகரிக்கிறது.
தனிமனித இடைவெளி
இந்தப் பகுதிகளில் தொற்று அதிகமாக இருந்தபோதும், தொற்றினால் இறப்பு குறைந்தே பதிவாகி இருக்கிறது. இதற்குக் காரணம் மும்பை மாநகராட்சி எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்தான். தொற்று இறப்பு சதவீதம் 0.05-0.10% என்ற அளவில்தான் இருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளில் தனிமனித இடைவெளி மற்றும் சுகாதாரம் நல்ல முறையில் பாதுகாக்கப்பட்டது ஆகிய காரணங்களால் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை மாநகராட்சி அறிக்கை
இதுகுறித்து மும்பை மாநகராட்சி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''இந்த அளவிற்கு கொரோனா தொற்று பரவி இருப்பதன் மூலம் மந்தை கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விட்டது என்று கருதி விட முடியாது. விரைவில் குடிசைப் பகுதிகளில் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கால்வாசி பேருக்கு கொரோனா
மும்பையில் எடுக்கப்பட்ட முதல் ஸீரோ ஆய்வு இதுதான். மும்பையில் மட்டும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 1,10,182 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருந்தது. 21,812 பேர் ஆக்டிவ் கேஸ்களாக இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,132 பேர் உயிரிழந்து உள்ளனர். இதற்கு முன்னதாக டெல்லியில் எடுக்கப்பட்டு இருந்தது. அங்கு கால் வாசி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
புதிய பரிசோதனை மையம்
தாராவி, மஹிம், தாதர் ஆகிய பகுதிகளில் இருக்கும் சிறப்பு காய்ச்சல் கிளினிக்குகளை மும்பை மாநகராட்சி நீக்கியுள்ளது. இனி அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் இலவச பரிசோதனை மையங்களில் அந்தப் பகுதி மக்கள் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். தொடர்ந்து தாராவியில் கொரோனா தொற்று குறைந்து வந்து இருப்பதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தாராவியில் மட்டும் 71 கிளினிக்குகள் அமைக்கப்பட்டு இருந்தது.