மும்பை மருத்துவமனை கொரோனா வார்டில் ஜேஜேவென கூட்டம்.. கிடத்தப்பட்ட சடலங்கள்.. ஷாக்கிங் வீடியோ
மும்பை: மும்பையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஒரே படுக்கையில் உயிருடன் இருப்பவரும் சடலமும் இருந்த வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய் பரவும் அபாயமின்றி கொரோனா பாதித்தோரின் உறவினர்களும் அதே வார்டில் இருப்பது பாதிப்பு எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸால் 19 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் மும்பை நோய் பரப்பும் மையாக உருவெடுத்து வருகிறது. நோய் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் மும்பை அரசு மருத்துவமனைகளில் இரு அதிர்ச்சியான சம்பவங்கள் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சியான் எனப்படும் பிருஹன் மாநகராட்சியால் பராமரிக்கப்படும் மருத்துவமனையில் ஒரே படுக்கை இரு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அது போல் அந்த நோயாளிகளின் உறவினர்கள் அதே வார்டில் தங்கியுள்ளனர். இது விதிகளுக்கு அப்பாற்பட்டது. அதே வார்டில் கொரோனாவால் பலியானோரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனை
ஒரு உடல் ஸ்டெர்ட்ச்சரில் வைக்கப்பட்டுள்ளது. இன்னொரு உடல் தரையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல் கேஇஎம் மருத்துவமனையிலும் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் கொரோனா நோயாளி என சந்தேகிக்கப்படும் நபர்கள் நேரடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.

தனி வார்டு
இதன் மூலம் மற்றவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த வீடியோக்கள் மும்பையில் உள்ள ஒரு பத்திரிகையாளர் எடுத்திருந்தார். இவை வெள்ளிக்கிழமை அன்று எடுக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு இருக்கும் என்ற சந்தேகத்தின் பேரில் அழைத்து வரப்படுபவர்கள் ரத்த மாதிரியில் நோய் உறுதியானால் மட்டுமே தனி வார்டுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

தாராவி
மருத்துவமனைகளில் படுக்கைக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பெரும்பாலான நோயாளிகள் தரையில் படுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் கார்டுபோர்டு பெட்டிகள் மீதும் சக்கர நாற்காலியில் அமர்ந்தும் உறங்குகிறார்கள். இங்கு சமூக இடைவெளியானது கேள்விக்குறியான நிலையில் உள்ளது. இந்த சியான் மருத்துவமனைக்கு வருவோர் சியான், கோலிவாடா மற்றும் தாராவி பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கருத்து தெரிவிக்க மறுப்பு
தாராவியில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எந்தவித பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் சடலங்களும், கொரோனா நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் ஒரே வார்டில் இருப்பது நோய் தொற்றை மேலும் அதிகரிக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

உடல்கள்
அது போல் மும்பை பரேல் பகுதியில் உள்ள கேஇஎம் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோவில் நோய் பரவல் குறித்து கவலைப்படாமல் ஏதோ பிக்னிக் வந்தது போல் கொரோனா நோயாளிகளுடன் உறவினர்கள் உள்ளனர். படுக்கை பற்றாக்குறையால் நோயாளிகளும் உறவினர்களும் தரையில் தஞ்சமடைந்துள்ளனர். அத்துடன் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடல் கருப்பு நிற பிளாஸ்டிக் உறையால் மூடப்பட்டுள்ளது.

மூச்சு பிரச்சினை
ஒரே வார்டில் குறிப்பிட்ட நபர்களுக்கு மேல் நோயாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு நடப்பதற்கே வழியில்லாத சூழல் உள்ளது. இதுகுறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பத்திரிகையாளர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து கேஇஎம் மருத்துவமனை டீனிடம் கேட்ட போது சாரி கேஸ் எனப்படும் மூச்சு பிரச்சினை காரணமாக ஏராளமானோர் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

முதல்வர்
இந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதிதான். நோயாளிகளின் உடல்நிலை சீராக உள்ளது. தொண்டையிலிருந்து சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த பரிசோதனை முடிவின் அடிப்படையில் அவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்படுவரா இல்லை சாதாரண வார்டுகளுக்கு அனுப்பப்படுவரா என்பது முடிவு செய்யப்படும் என்றார். இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் 20 படுக்கைகள் மட்டுமே உள்ளன. ஆனால் நோயாளிகளை பார்த்தால் 20-க்கும் மேல் உள்ளனர். இதுகுறித்து கடந்த வெள்ளிக்கிழமை மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில் இது போன்ற நிலைகள் மருத்துவமனைகளில் பார்க்கிறோம். இந்த சம்பவங்களை பொறுத்துக் கொள்ள முடியாது. நடவடிக்கை எடுக்கும் சூழலுக்கு அரசை தள்ள வேண்டாம் என தாக்கரே கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications