அதிகாலை பாய்ந்த கார்! தூக்கிவீசப்பட்ட இளைஞர் பலி! காரை ஓட்டிய நபரை பார்த்ததும் மிரண்ட மும்பை போலீஸ்
மும்பை: மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் அதிகாலை நேரத்தில் ஒரு பகீர் சாலை விபத்து நடந்துள்ளது. காலை 4 மணியளவில் எஸ்யூவி கார் மோதியதில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்கே உள்ளே கார் ஓட்டிய நபரை பார்த்தவுடன் போலீசார் ஒரு நொடி மிரண்டு போய்விட்டார்கள்.
மகாராஷ்டிராவில் கடந்த மே மாதம் மதுபோதையில் போர்ஷோ சொகுசு காரை ஓட்டி சென்ற 17 வயது சிறுவன் மோசமான விபத்தை ஏற்படுத்தினான். அவனது கார் மோதியதில் பைக்கில் சென்ற தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் கொடுமை என்னவென்றால் அந்த சிறுவனைக் கட்டுரை எழுதச் சொல்லி நீதிமன்றம் ஜாமீன் கொடுத்து இருந்தது. இதற்கிடையே மகாராஷ்டிராவில் மீண்டும் அதேபோன்ற ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. இந்த முறை மும்பையில் சிறுவன் ஓட்டி சென்ற எஸ்யூவி கார் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
விபத்து: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் கோரேகான் பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அதிகாலை நேரத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற எஸ்யூவி கார் ஒரு பைக்கில் மோதியதில் 24 வயது இளைஞன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தைத் தொடர்ந்து 17 வயதான அந்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், எஸ்யூவி உரிமையாளர் உட்பட இருவர் மீதும் இப்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞர் அதே பகுதியைச் சேர்ந்த நவின் வைஷ்ணவ் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. நவின் வைஷ்ணவ் அப்பகுதியில் பால் விநியோகம் செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. தவறான பக்கத்திலிருந்து பாய்ந்த அந்த மஹிந்திரா ஸ்கார்பியோ எஸ்யூவி வாகனம் இவர் மீது மோதியுள்ளது. அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த விபத்தில் டூவிலரில் சென்ற வைஷ்ணவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திவிட்டு 17 வயது சிறுவன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிர்ந்த போலீஸ்: இருப்பினும், டூவிலரை மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த எஸ்யூவி வாகனம் அருகே இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றுவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை அடைந்த போலீசார் உள்ளே டிரைவர் சீட்டில் காயங்களுடன் மைனர் சிறுவன் இருப்பதைப் பார்த்தவுடன் மிரண்டு போனார்கள். வண்டியைத் தாறுமாறாக இயக்கி இவ்வளவு மோசமான விபத்தை அந்த சிறுவன் ஏற்படுத்தியதைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் தப்ப முயன்ற நிலையில், போலீசார் அவனைக் கைது செய்துள்ளனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வைஷ்னாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கைது: இந்த விபத்து தொடர்பாக 17 வயதான அந்த சிறுவன் மீதும் எஸ்யூவி உரிமையாளர் இக்பால் ஜிவானி (48) மற்றும் அவரது மகன் முகமது பாஸ் இக்பால் ஜிவானி (21) ஆகியோர் மீது மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காரை பறிமுதல் செய்த போலீசார், சிறுவன் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் கைது செய்தனர். அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சியுடன் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய போது சிறுவன் குடிபோதையில் இருந்தானா என்பதைக் கண்டறிய அவனிடம் ரத்த மாதிரிகளையும் போலீசார் சேகரித்துள்ளனர். மேலும், விபத்திற்கு முன்பு நண்பர்களுடன் இணைந்து மது பார்டி எதாவது செய்தாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications