தண்ணீரில் தத்தளிக்கும் மும்பை.. 107 ஆண்டு வரலாற்றை மாற்றி எழுதிய கனமழை.. என்ன நடந்தது?
மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கனமழை கொட்டி வருகிறது. விமான போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்துகள் முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கடந்த 107 ஆண்டு சாதனையை இந்த கனமழை முறியடித்துள்ளது என்பது தொடர்பான பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவழமை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. இது தமிழகத்திலும் எதிரொலித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவையில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

அதேபோல் பிற அண்டை மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பெங்களூருக்கு கனமழைக்கான வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் கனமழை பெய்து வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் மும்பைக்கு இன்று எல்லோ அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கனமழை கொட்டிய நிலையில் தற்போது ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக ரெட் அலர்ட் விடுக்கப்படும்போது 24 மணிநேரத்தில் 204.5 மில்லி மீட்டருக்கு (20 செமீ)
அதிகமான மழை பெய்யும். அதன்படி மும்பையில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
தாழ்வான பகுதிகளாக உள்ள குர்லா, சியான், தாதர், பரேல் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த மழையின் காரணமாக புறநகர் ரயில் சேவை மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மழை தொடரும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மும்பையில் தென்மேற்கு பருவமழை என்பது 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்கூட்டியே தொடங்கி உள்ளது. பொதுவாக மும்பையில் தென்மேற்கு பருவமழை என்பது ஜூன் 11ம் தேதி தான் தொடங்கும். ஆனால் இந்த முறை 16 நாட்கள் முன்பே மும்பையில் தென்மேற்கு பருவமழை என்பது தொடங்கி உள்ளது. இது கடந்த 25 ஆண்டுகளில் முதல் முறையாக நடந்துள்ளது.
அதுமட்டுமின்றி மும்பைக்கு மே மாதத்தில் பெய்ய வேண்டிய மழை என்பது கடந்த 107 ஆண்டுகளுக்கு பிறகு அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications