இரவு நடந்த சம்பவம்.. காலையில் மூழ்கிய மும்பை.. லேட்டா வந்தாலும் வெளுத்து விட்ட பருவமழை! மக்கள் அவதி
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் தலைநகர் மும்பையில், நேற்றிரவு முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் இன்று மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சாலைகளில் தேங்கிய வெள்ள நீர், கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தது போன்ற சம்பவங்களால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மும்பையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மட்டும் 200 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், புறநகர் ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.

கனமழை
நேற்றிரவு முதல் காலை 5:30 மணி வரையிலான காலகட்டத்தில் மட்டும் மும்பையில் பல இடங்களில் 200+ மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழைப் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை அதன் வழக்கமான தேதியை விட 13 நாட்கள் தாமதமாகச் செவ்வாய்க்கிழமை மும்பையைத் தொடங்கியது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்பதைப் போல இந்த மழை தாமதமாக வந்தாலும், ஒரே நாளில் கொட்டி தீர்த்துவிட்டது. இந்த மழை கடுமையான கோடை வெப்பத்திலிருந்து மக்களுக்கு நிம்மதி அளித்தாலும், முதல் நாளே பெரும் பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
மோசமான பாதிப்பு
அதிகப்படியான மழையின் காரணமாக மும்பையின் பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விக்ரோலி மேற்கு பகுதியில் உள்ள ஜோகேஸ்வரி-விக்ரோலி இணைப்புச் சாலையில், சன் சிட்டி குடியிருப்பு வளாகத்திற்கு அருகில் இருந்த ஒரு பாதுகாப்பு சுவர் பலத்த மழையால் இடிந்து விழுந்தது. மற்றொரு இடத்தில் சாலையோரம் இருந்த ஒரு பெரிய மரம் காரின் மீது விழுந்து நசுக்கியதில், காரின் உள்ளே இருந்த ஓட்டுநர் காயமடைந்தார். அவரை மீட்கும் பணிகளும், விழுந்த மரத்தை அகற்றும் பணிகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன.
ரயில் சேவை முடக்கம்
சாலை விபத்துகள் மட்டுமல்லாமல், ரயில் போக்குவரத்து சேவைகளும் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக நவி மும்பை பகுதியில் மழை நீர் காரணமாக ரயில் தண்டவாளம் உள்வாங்கியது. இதனால் அந்த பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டன. அந்த ரூட்டில் சில பகுதிகள் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டன. காலை 7 மணிக்கு மேல் தான் ரயில்கள் வெறும் 10 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டன. அது பிறகு 30 கிலோ மீட்டர் வேகமாக அதிகரிக்கப்பட்டது. ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் இதனால் காலையில் வேலைக்குச் செல்லும் மக்களின் கூட்டம் ரயில் நிலையங்களில் அலைமோதியது.

நடவடிக்கை
கனமழையால் காலையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்த பிறகே நிலைமை சற்று மேம்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதை, ஹிந்த்மாதா, தாதர் மற்றும் மலாட் சுரங்கப்பாதை ஆகிய இடங்களில் தேங்கியிருந்த நீர் உடனடியாக அகற்றப்பட்டுள்ளது என்றும் சியோனில் உள்ள காந்தி மார்க்கெட் பகுதியிலும் தண்ணீர் முழுமையாக வடிக்கப்பட்டு போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது என்றும் மும்பை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் மற்றும் பேருந்து சேவைகளும் தற்போது தடையின்றி வழக்கம் போல் இயங்கி வருகின்றன. மேலும், நகரில் மழைப்பொழிவு தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளதால், மாநகராட்சி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு, நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications