மாணவனுக்கு மது கொடுத்து பலாத்காரம் செய்த பிரபல மும்பை பள்ளி ஆசிரியை..! ஓராண்டாக அத்துமீறிய கொடூரம்
மும்பை: மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபலத் தனியார் பள்ளியின் 40 வயது பெண் ஆசிரியை, 16 வயது மாணவனைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு வருடமாகப் பலமுறை இந்த வன்கொடுமை நடந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.
பொதுவாக மாணவர்களை ஆசிரியர்கள் தான் வழிநடத்த வேண்டும். ஆனால், சில நேரங்களில் ஆசிரியர்களே மாணவர்களிடம் அத்துமீறும் சம்பவங்களும் நடக்கிறது. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அரங்கேறியுள்ளது.

மும்பை ஆசிரியை
மும்பையில் இயங்கி வரும் பிரபலத் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் 40 வயது பெண் ஆசிரியை ஒருவர் தனது மாணவனையே பலாத்காரம் செய்துள்ளார். 16 வயதான அந்த மாணவனைப் பல்வேறு நட்சத்திர ஹோட்டல்களில் வைத்து ஓராண்டிற்கும் மேலாகப் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே திருமணமான அந்தப் பெண் ஆசிரியைக்குக் குழந்தைகளும் உள்ளனர். அவர் போக்சோ சட்டம் , சிறார் நீதி சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இதுவரை பள்ளி நிர்வாகம் இது குறித்து எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
என்ன நடந்தது?
கடந்த 2023ல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை அந்தப் பள்ளியில் ஆங்கிலப் பாடம் சொல்லிக் கொடுப்பவர். அந்த மாணவன் 11ம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியை அந்த வகுப்பிற்குப் பாடம் எடுத்துள்ளார். 2023 டிசம்பரில் நடந்த பள்ளி ஆண்டு விழாவிற்கு டான்ஸ் பயிற்சி அளித்தபோதே அந்த மாணவன் மீது ஈர்ப்பு ஏற்பட்டதாக ஆசிரியை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். 2024 ஜனவரியில் அந்த மாணவனிடம் அத்துமீற ஆரம்பித்துள்ளார்.
முதலில் தயங்கிய மாணவன், ஆசிரியையைத் தவிர்க்கத் தொடங்கினான். இதனால் அந்த ஆசிரியை, தனது பெண் தோழி ஒருவரின் உதவியை நாடியுள்ளார். அந்தப் பெண் மாணவனை அணுகி, வயதான பெண்களும் இளைஞர்களும் உறவில் இருப்பது சாதாரணமாகிவிட்டதாகக் கூறியிருக்கிறார். அதன் பிறகே, அந்த ஆசிரியையை மாணவன் சந்திக்க ஆரம்பித்துள்ளான். ஆசிரியையின் இந்தத் தோழியும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
பலாத்காரம்
முதலில் ஆசிரியை காரில் மாணவனை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார். இது குறித்து போலீசார் கூறுகையில், "அந்தச் சிறுவனின் ஆடைகளை வலுக்கட்டாயமாக ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்தச் சம்பவத்தை நினைத்துப் பயப்பட்ட மாணவன், மன அழுத்திற்குள்ளாக்கி இருக்கிறான். இதை அறிந்த ஆசிரியை அவனுக்கு மன அழுத்த மாத்திரைகளையும் கொடுத்திருக்கிறார்.
மது கொடுத்து அத்துமீறல்
ஆசிரியை மாணவனுக்கு மது கொடுத்து, தெற்கு மும்பை மற்றும் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவனைப் பாலியல் உறவு கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். மாணவனின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்த குடும்பத்தினர் விசாரித்த போதுதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மாணவன் நடந்ததைக் கூறியதும், பெற்றோர் அதிர்ந்துவிட்டனர். இருப்பினும், பள்ளி இறுதித் தேர்வு நெருங்கியது. இதனால் ஆசிரியை இனி தொந்தரவு செய்ய மாட்டார் எனக் குடும்பத்தினர் முதலில் இதை வெளியில் சொல்லாமல் மறைத்து விட்டனர்.
போலீசில் புகார்
இந்த ஆண்டு தொடக்கத்தில் மாணவன் 12-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்று பள்ளியை விட்டு வெளியேறிய பிறகும் ஆசிரியை அவனைத் தொடர்பு கொண்டதால் நிலைமை மோசமானது. ஆசிரியை தனது வீட்டு வேலை செய்பவர் மூலம் மாணவனைத் தொடர்பு கொண்டு தன்னை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார். இது தெரிந்த பிறகே மாணவனின் பெற்றோர் போலீசாரிடம் அணுகி புகார் அளித்தனர்" என்றார்.
இது தொடர்பாக போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பையில் டாப் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியரே இதுபோல நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் அடுத்த கட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications