ஆர்யன் கான் ஜாமீன் மனு.. மும்பை ஐகோர்டில் அனல் பறக்க வாதம்.. விசாரணை நாளை ஒத்திவைப்பு
மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கானின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மும்பை உயர் நீதிமன்றம் நாளை ஒத்தி வைத்ததுள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடைபெறுவதை என்சிபி அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக இதுவரை 20 பேரைப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறிப்பாகப் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். அவர் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவுக்குப் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆர்யன் கான் கைது
ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சாட்கள் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யும் வகையில் உள்ளதால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், சமூகத்தில் பவுர்புல்லான நபர் என்பதால் ஆதாரங்களை அழிக்க முயலலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட போது ஆர்யன் கானிடம் எந்தவொரு போதைப் பொருளும் கைப்பற்றப்படவில்லை என்பதையே அவரது வழக்கறிஞர்கள் தொடர்ந்து கூறி வந்தனர்.

சரியானது இல்லை
இதையடுத்து ஆர்யன் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டது. அதில் தனது மொபைல் போனில் இருந்து வாட்ஸ்அப் சாட்களை என்சிபி அதிகாரிகள் தவறான முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது முற்றிலும் நியாயமற்ற ஒன்று எனத் தெரிவித்துள்ளார். மேலும் பல மாதங்களுக்கு முன் நடந்த ஒரு வாட்ஸ்அப் சாட்டை இந்தச் சம்பவத்துடன் தொடர்புப்படுத்துவது சரியானது இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

வாட்ஸ்அப் சாட்கள்
இந்த வழக்கு மும்பை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த முறை ஆர்யன் கான் தரப்புக்காக, முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜரானார். அப்போது அவர், "ஆர்யன் கான் மீதான வழக்கு பழைய வாட்ஸ்அப் சாட்களை அடிப்படையாகக் கொண்டது. அதற்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும், அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தவும் இல்லை வைத்திருக்கவும் இல்லை. அப்படியிருக்க அவரை கைது செய்யத் தேவையில்லை.

கைது தேவையில்லை
இவர்கள் எல்லாம் சிறுவர்கள் தான். அவர்களை மறுவாழ்வுக்கு அனுப்பலாம். விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதில்லை. சில செய்தித்தாளில் இது தொடர்பாகச் செய்திகள் வந்துள்ளது. அதாவது சிறிய அளவு போதைப்பொருளை வைத்திருந்தாலும் சரி உட்கொண்டாலும் சரி மறுவாழ்வுக்குச் செல்ல தயாராக இருந்தால், கைது செய்யத் தேவையில்லை. மேலும், சொகுசு கப்பலில் செல்லவும் அவர் டிக்கெட் வாங்கவில்லை, அவர் சிறப்பு விருந்தினராகவே கப்பலுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ஆதாரம் இல்லை
அவரது பெற்றோர் பிரபலமானவர்கள் என்பதால், இந்த வழக்கு ஊடகம் மற்றும் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த வழக்கில் அவர் தவறாகக் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை வேண்டுமென்றே டார்கெட் செய்துள்ளனர். இப்படி இருக்கும் போதும் அவர் ஏன் 20 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று வாதாடினார்.

நாளை ஒத்தி வைப்பு
அதேநேரம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த என்சிபி தரப்பு, அவர் போதைப் பொருளைப் பயன்படுத்துவர் மட்டுமல்ல கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார் என்றனர். மேலும், அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதால் ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை(புதன்கிழமை) பிற்பகல் 2:30 மணிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications