மகாராஷ்டிராவை கூறு போட்டு மும்பை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க பாஜக சதி.. காங். தலைவர் பகீர்!
மும்பை: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து மும்பை மாநகரை பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க மத்திய பாஜக அரசு சதித் திட்டம் தீட்டி இருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நானா படோலே கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் வரும் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் பொது சிவில் சட்டம், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்டவை கொண்டு வரப்படலாம் என கூறப்படுகிறது. அத்துடன் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாட்டின் பெயரை இந்தியா என்பதை பாரத் என மாற்றும் அஜெண்டாவையும் பாஜக வைத்திருக்கிறது என்பது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.

இந்நிலையில் மும்பையில் நேற்று மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நானோ படோலே செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மகாராஷ்டிராவில் இருந்து மும்பையை பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க பாஜக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, கொரோனா பிரச்சனை, மணிப்பூர் விவகாரம் போன்ற முக்கியமான பிரச்சனைகளின் போது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டவே இல்லை. ஆனால் இப்போது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை ஏன் கூட்ட வேண்டும்?
மும்பை என்பது ஒரு சர்வதேச நகரம். நாட்டின் வர்த்தகத் தலைநகரம். மும்பையின் வைர சந்தை, சர்வதேச நிதி சேவை மையம், ஏர் இந்தியா என அத்தனையையும் மும்பையில் இருந்து மாற்றுவதற்கு மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. மும்பை பங்கு சந்தை, தேசிய பங்கு சந்தை ஆகியவற்றை குஜராத் மாநிலத்துக்கு கொண்டு போகவும் பாஜக அரசு திட்டமிட்டிருக்கிறது. இத்தகைய மத்திய அரசின் முடிவுகளுக்கு முந்தைய காங்கிரஸ்-சிவசேனா- என்சிபி கூட்டணி அரசு முட்டுக்கட்டையாக இருந்தது. இதனாலேயே அந்த அரசை மத்திய பாஜக அரசு கவிழ்த்துவிட்டு புதிய அரசாங்கத்தை அமைத்திருக்கிறது. இவ்வாறு நானா படோலே கூறினார்.











Click it and Unblock the Notifications