நெருங்கும் தேர்தல்.. மகாராஷ்டிராவில் நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே, காங்கிரஸ்-பாஜக இம்மாநிலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்ற மகாராஷ்டிரா செல்கிறார்.

வார்தா மாவட்டத்தில் 'PM விஸ்வகர்மா' திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர், பயனாளர்களுக்கு சான்றிதழ்களையும், கடன்களையும் வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து அமராவதியில் PM Mega Integrated Textile Regions மற்றும் Apparel (PM MITRA) பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டியுள்ளார்.
இந்த பூங்காக்கள் மூலம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மேலும் அதிக முதலீடுகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது, “காங்கிரஸ் இன்று விநாயகர் சதுர்த்தியை கூட வெறுக்கிறது. சுதந்திரப் போராட்டத்தின்போது விநாயகர் சதுர்த்தி விழா நாட்டின் ஒருமைப்பாட்டின் விழாவாக மாறியது. இதை திலகர்தான் செய்தார். சாதிய வேறுபாடின்றி அனைத்து மக்களும் விநாயகர் சதுர்த்தியின்போது ஒன்று கூடுகிறார்கள். எனவேதான் காங்கிரஸ் இந்த விழாவை வெறுக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு கடவுள் கணபதியை சிறையில் அடைத்ததை பார்த்திருப்பீர்கள். மக்கள் வழிபட்டு வந்த கணபதி சிலை போலீஸ் வேனில் சிறை வைக்கப்பட்டது. இந்த அவமானத்தைக் கண்டு நாடு முழுவதும் கொதிப்படைந்துள்ளது. இந்த விவகாரத்தில் காங்கிரசின் கூட்டணி கட்சிகள் கூட மவுனம் காப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. விநாயகர் அவமதிக்கப்பட்டதற்கு கூட எதிர்ப்பு தெரிவிக்கும் தைரியம் இல்லாத அளவுக்கு கூட்டணி கட்சிகளிடையே காங்கிரஸின் கை ஓய்ந்திருக்கிறது” என்று பேசியுள்ளார்.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா அரசின் ஆச்சார்யா சாணக்யா திறன் மேம்பாட்டு மைய திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் கீழ் 15 முதல் 45 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 1.5 லட்சம் இளைஞர்கள் இலவசமாக பயிற்சி பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிராவை பொறுத்தவரை அங்கு அரசியல் களம் பாஜகவுக்கு பெரிய அளவில் சாதகமாக இல்லை. கடந்த லோக்சபா தேர்தலிலேயே இது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஷிண்டே தரப்பு, உண்மையான சிவசேனா நாங்கள்தான் என்று நீதிமன்றம் வாயிலாக நிரூபித்திருந்தாலும், மக்கள் மத்தியில் இது நிரூபிக்கப்படவில்லை. அதேபோலதான் அஜித் பவாரும், தன்னை தேசியவாத காங்கிரஸின் உரிமையாளர் என்று சொல்லிக்கொண்டாலும், மக்கள் இதை ஏற்றுக்கொள்வில்லை.
இப்படி இருக்கையில், சரத் பவார்+உத்தவ் தாக்ரே+காங்கிரஸின் மகா விகாஸ் அகாடி கூட்டணி நல்ல ஃபார்மில் இருக்கிறது. இப்படியே போனால் பாஜக இம்மாநிலத்தில் செல்ப் எடுக்காது என்பதால், மகாராஷ்டிராவுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவத்தை அளித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே இன்று பிரதமரின் வருகை இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications