“அடடடடா ஆரம்பமே”.. விரைவில் தேர்தல் நடக்கவுள்ள மகாராஷ்டிராவில் மேளம் கொட்டி மகிழ்ந்த பிரதமர் மோடி!
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் உள்ள ஜகதம்பா மாதா கோவிலுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மேளம் கொட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் பயணமாக மகாராஷ்டிரா மாநிலம் சென்றுள்ளார். இன்று காலை மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை அசோக் தவான் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றனர். அங்கிருந்து வாஷிம் போகாராதேவிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்றார் பிரதமர் மோடி.

போஹாராதேவியில் உள்ள ஜகதாம்பா மாதா கோவிலில் அவர் தரிசனம் செய்தார். அங்கு உள்ள பாரம்பரிய இசைக்கருவியை (Dhol) வாசித்து மகிழ்ந்தார். வாஷிமில் உள்ள துறவி சேவாலால் மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி.
பின்னர் பிரதமர் மோடி பஞ்சாரா சமூகத்தின் வளமான பாரம்பரியத்தை போற்றும் பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, ரூ.23,300 கோடி மதிப்புள்ள விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடிதொடங்கி வைத்தார்.
9.4 கோடி விவசாயிகளுக்கு சுமார் ரூ. 20,000 கோடி மதிப்புள்ள பி.எம். கிசான் சம்மான் திட்டத்தின் 18-வது தவணையை வழங்கினார். பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி சுமார் ரூ.3.45 லட்சம் கோடி. மேலும், சுமார் ரூ.2,000 கோடி வழங்கும் நமோஷேத்கரி மகாசன்மன் நிதி திட்டத்தின் 5-வது தவணையையும் வழங்கி தொடங்கி வைத்தார்.
வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் ரூ.1,920 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமர் மோடி இன்று மாலை 4 மணியளவில் தானே செல்கிறார். அங்கு ரூ.32,800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.14,120 கோடி மதிப்பிலான மும்பை மெட்ரோ ரயில் வழித்தடத்தின் 3வது கட்ட திட்டத்தை பி.கே.சி. முதல் ஆரே வரையிலான ஜே.வி.எல்.ஆர் வரை தொடங்கி வைக்கிறார். அந்த ரயிலில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார்.
ரூ.12,200 கோடி செலவில் தானே ஒருங்கிணைந்த மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மோடி அடிக்கல் நாட்டுகிறார். மகாராஷ்டிராவில் மொத்தம் ரூ.56 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
ரூ. 3,310 கோடி செலவில் சேதா நகர் முதல் ஆனந்த் நகர் வரையிலான கிழக்கு நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.700 கோடி செலவில் கட்டப்படவுள்ள தானே மாநகராட்சியின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி தானேவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
வாஷிமில் மேளம் கொட்டிய வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, வாஷிமில், சிறப்புமிக்க பஞ்சாரா கலாச்சாரத்தில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்ற நங்காராவை இசைத்தேன். வரும் காலங்களில் இந்த கலாச்சாரத்தை மேலும் பிரபலப்படுத்த நமது அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications