இந்தி நடிகை கருத்து.. கொந்தளித்த இந்துத்துவாவினர்! நடுவே வந்த அக்ஷய் -“நோஸ்கட்” செய்த பிரகாஷ் ராஜ்
மும்பை: சீனா ராணுவத்துடனான கல்வான் பள்ளத்தாக்கு பிரச்சனையை சுட்டிக்காட்டிய பாலிவுட் நடிகை ரிச்சா சத்தாவை விமர்சித்த நடிகர் அக்ஷய் குமாரை பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கண்டித்து இருக்கிறார்.
கடந்த புதன் கிழமை, இந்திய வடக்கு ராணுவ பிரிவு கமாண்டர் உபேந்திரா திவேதி, "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்பது தொடர்பான எந்த உத்தரவையும் செயல்படுத்துவதற்கு இந்திய ராணுவம் தயாராக உள்ளது." என்று கூறினார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றியபோது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டு, அகதிகள் மீண்டும் தங்கள் நிலங்கள், வீடுகளை பெறுவார்கள் எனவும் தெரிவித்தார்.

ராணுவ அதிகாரி பேச்சு
இதனை சுட்டிக்காட்டி பேசிய ராணுவ அதிகாரி உபேந்திர திவேதி, "இந்திய ராணுவத்தை பொறுத்தவரை அரசின் எந்த ஒரு உத்தரவையும் செயல்படுத்துவோம். இதுபோன்ற உத்தரவுகள் எப்போது பிறப்பிக்கப்பட்டாலும், நாங்கள் அதற்காக எப்போது தயார் நிலையில் இருப்போம்." என்றார்.

ரிச்சா சத்தா ட்வீட்
ராணுவ அதிகாரி திவேதியின் இந்த கருத்தை ட்விட்டரில் ஒருவர் பகிர்ந்து இருந்தார். அதை ட்விட்டரில் பிரபல பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா பதிவிட்டு, "கல்வான் ஹாய் சொல்கிறது (Galwan says hi)" என்று பதிவிட்டு இருந்தார். இந்திய எல்லை பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்ற சீனா படையினருக்கும் இந்திய ராணுவத்துக்கும் இடையே கல்வான் பகுதியில் 2 ஆண்டுகள் முன்பாக மோதல் ஏற்பட்டது.

கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் ரிச்சா சத்தாவின் இப்பதிவு இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாகவும், தேசத்துக்கு எதிரான கருத்து எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான் ஆதரவாளர், சீனா ஆதரவாளர், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் என்பன போன்ற விமர்சனங்களையும் ரிச்சா சத்தா எதிர்கொண்டு வருகிறார்.

அக்ஷய் குமார்
அதே சமயம் ரிச்சா சத்தா தெரிவித்த கருத்தில் தவறேதும் இல்லை எனவும், மத்திய அரசை விமர்சிக்கும் வகையிலேயே அவரது பதிவுகள் உள்ளதாகவும் சில ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் ரிச்சா சத்தாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.

வலிக்கிறது
அந்த பதிவில், "இதை பார்க்கும்போது வலிக்கிறது. நமடு ஆயுதப்படைகளுக்கு நாம் நன்றி இன்றி இருக்கக்கூடாது. அவர்கள் இருப்பதால்தான் நாம் இன்று இருக்கிறோம்." என்று குறிப்பிட்டு இருந்தார். அக்ஷய் குமாரின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்திட்டு உள்ளார்கள்.

பிரகாஷ் ராஜ் ஆதரவு
குறிப்பாக பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ், ரிச்சா சத்தாவை ஆதரித்தும் அக்ஷய் குமாரை எதிர்த்தும் பதிவிட்டு இருக்கிறார். ரிச்சா சத்தாவுடன் நிற்கிறோம் என்று பதிவிட்ட ராஷ்டிரிய லோக் தளம் கட்சி நிர்வாகி பிரஷாந்த் கனோஜியாவின் ட்விட்டர் பதிவை ரீட்வீட் செய்த பிரகாஷ் ராஜ், "நீங்கள் என்ன சொன்னீர்கள் என்பது எங்களுக்கு புரிகிறது. நாங்கள் உங்களோடு நிற்கிறோம்." என்று பதிவிட்டார்.

அக்ஷய்க்கு பதிலடி
அதை தொடர்ந்து ரிச்சா சத்தா மீதான அக்ஷய் குமாரின் ட்வீட்டை விமர்சித்த பிரகாஷ் ராஜ், "உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை அக்ஷய் குமார். ரிச்சா சத்தா உங்களை விட நம் நாட்டு மக்களுக்கு மிகவும் பொறுத்தமானவர்." என்று பதிவிட்டுள்ளார். அக்ஷய் குமார் கனடா குடியுரிமை பெற்றதைவைத்தே பிரகாஷ் ராஜ் இவ்வாறு தெரிவித்துள்ளதாக பலர் கருத்திட்டு வருகின்றனர்












Click it and Unblock the Notifications